சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
சென்செக்ஸ் 210.08 புள்ளிகள் சரிந்து 78,428.95 புள்ளிகளாகவும், நிஃப்டி 159.40 புள்ளிகள் குறைந்து 24,614.90 புள்ளிகளாக நிலைபெற்றது.
மும்பை: ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் ஒப்பந்தங்களைக் கொண்ட பங்குகளுக்கான புதிய ஏல முறை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, இன்று சரிவுடன் நிறைவடைந்தன.
பங்குச் சந்தையின் 'ஈக்விட்டி கேஷ்' பிரிவில் 'முடிவு நேர ஏல நடைமுறை' இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது. விலையை வெளிப்படையாக மாற்றும் நோக்கில், தகுதியுள்ள பங்குகளின் இறுதி விலையைத் தீர்மானிக்க ஏலத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த புதிய ஏல முறை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இன்றைய வர்த்தகத்தின் ஆரம்ப கட்டத்தில், பங்குச் சந்தை குறியீடுகள் ஏற்ற இறக்கமான போக்கைக் கடைப்பிடித்தன.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் அதிகபட்சமாக 79,143.15 புள்ளிகளையும் குறைந்தபட்சமாக 78,211.87 புள்ளிகளையும் எட்டியது. அதாவது 931.28 புள்ளிகள் வரையிலான ஏற்ற இறக்கத்தைக் கண்டது. 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 210.08 புள்ளிகள் சரிந்து 78,428.95 புள்ளிகளாகவும், நாள் முழுவதும் சரிவுடனேயே வர்த்தகமான 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 159.40 புள்ளிகள் குறைந்து 24,614.90 புள்ளிகளாக நிலைபெற்றது.
Advertisement
Advertisement
நேற்று (திங்கள்கிழமை) தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், 544.39 புள்ளிகள் உயர்ந்து 78,639.03 புள்ளிகளாகவும், நிஃப்டி 390.70 புள்ளிகள் உயர்ந்து 24,774.30 புள்ளிகளாக முடிவடைந்தன.
இன்றுடன் வாராந்திர ஒப்பந்த காலாவதி மற்றும் ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் பிரிவில் இறுதி விலையைத் தீர்மானிப்பதற்கான புதிய நடைமுறை அமலாக்கம் செய்ததையடுத்து பங்குச் சந்தை போக்கில் ஒருவித ஏற்றத்தாழ்வை கண்டது.
சென்செக்ஸில் ஹிந்துஸ்தான் யூனிலீவர், என்டிபிசி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்டர்குளோப் ஏவியேஷன் மற்றும் டெக் மஹிந்திரா உள்ளிட்ட பங்குகள் சரிந்தும் மறுபுறம் ட்ரெண்ட், பஜாஜ் ஃபைனான்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டாடா ஸ்டீல் ஆகிய பங்குகள் உயர்ந்தன. நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.3 சதவீதமும் சரிந்த நிலையில், ஸ்மால்கேப் குறியீடு 0.2 சதவீதம் உயர்ந்தன.
பங்குச் சந்தை தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 922.26 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.
ஆசியச் சந்தைகளைப் பொறுத்தவரை, தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கி 225 மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு ஆகியவை ஏற்றத்துடன் நிறைவடைந்தன. அதே வேளையில் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு சரிவுடன் முடிவடைந்தன.
ஐரோப்பியச் சந்தைகள் பெரும்பாலும் ஏற்றத்துடன் வர்த்தகமானது. அமெரிக்கச் சந்தைகள் நேற்று (திங்கள்கிழமை) குறிப்பிடத்தக்க ஏற்றத்துடன் நிறைவடைந்தன.
சர்வதேச அளவில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 2.49 சதவீதம் உயர்ந்து, பீப்பாய் ஒன்றுக்கு 85.86 அமெரிக்க டாலராக உள்ளது.
Stock market benchmark indices Sensex and Nifty closed lower on Tuesday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.