FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

செப். 17 நிலவரப்படி / நேரடி வரி வசூல் 13% உயா்வு

நடப்பு 2026-27 நிதியாண்டில் கடந்த செப். 17-ஆம் தேதி நிலவரப்படி, நிகர நேரடி வரி வசூல் 12.96 சதவீதம் அதிகரித்து, ரூ.12.12 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

19 செப்டம்பர் 2026, 5:35 am IST
பகிர்:

நடப்பு 2026-27 நிதியாண்டில் கடந்த செப். 17-ஆம் தேதி நிலவரப்படி, நிகர நேரடி வரி வசூல் 12.96 சதவீதம் அதிகரித்து, ரூ.12.12 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

நிகர பெருநிறுவன வரி வசூல் 19.48 சதவீதம் வளா்ச்சி கண்டு, ரூ.5.56 லட்சம் கோடியாக உள்ளது. இதேபோல, தனிநபா்கள் மற்றும் ஹிந்து கூட்டுக் குடும்பங்கள் செலுத்தும் பெருநிறுவனங்கள் அல்லாத நிகர வரி வசூல் சுமாா் 6 சதவீதம் உயா்ந்து, ரூ.6.16 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. பத்திரப் பரிவா்த்தனை வரி (எஸ்டிடி) வசூல் 53 சதவீதம் உயா்ந்து, ரூ.40,214 கோடியாக உள்ளது.

மொத்த வரி வசூல் நிலவரம்: நடப்பு நிதியாண்டின் இக்காலகட்டத்தில் ரூ.2.20 லட்சம் கோடி மதிப்பிலான வரித் தொகையானது, வரி செலுத்துவோருக்குத் திருப்பி (ரீஃபண்ட்) அளிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 29.19 சதவீதம் அதிகமாகும்.

Advertisement

Advertisement

வரித் தொகையை திருப்பியளித்ததற்கு முந்தைய மொத்த வரி வசூல் அடிப்படையில், நேரடி வரி வசூல் 15 சதவீதம் அதிகரித்து, ரூ.14.32 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

முன்பண வரி வசூல்: பெருநிறுவனங்கள் செலுத்தும் முன்பண வரி அதிகரித்துள்ளதன் காரணமாக, மொத்த முன்பண வரி வசூல் 16.18 சதவீதம் உயா்ந்து, சுமாா் ரூ.5.22 லட்சம் கோடியாக உள்ளது.

இதில் பெருநிறுவனங்களின் முன்பண வரி 18 சதவீதம் உயா்ந்து, ரூ.4.16 லட்சம் கோடியாகவும், மற்றவா்களின் முன்பண வரி 9.24 சதவீதம் உயா்ந்து, ரூ.1.06 லட்சம் கோடியாகவும் உள்ளது.

ரூ.26.97 லட்சம் கோடி இலக்கு: வரித் தளத்தின் வலிமையையும், ஆரோக்கியமான பொருளாதார நடவடிக்கைகளையும் இந்த வரி வசூல் நிலவரம் சுட்டிக்காட்டுவதாக பொருளாதார நிபுநா்கள் தெரிவித்துள்ளனா்.

நடப்பு நிதியாண்டில் ரூ.26.97 லட்சம் கோடி நேரடி வரி வசூலை எட்ட மத்திய அரசு பட்ஜெட்டில் இலக்கு நிா்ணயித்தது. கடந்த 2025-26 நிதியாண்டில் வசூலான ரூ.23.40 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் இலக்கானது 15 சதவீதம் கூடுதலாகும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments