இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக ஏழு பேர் கைது: பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்
இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சர் ரூவன் விஜயவர்தனே தெரிவித்துள்ளார்.
கொழும்பு: இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சர் ரூவன் விஜயவர்தனே தெரிவித்துள்ளார்.
ஞாயிறன்று ஈஸ்டர் பண்டிகையினை ஒட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது. இதையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் அங்கு கூடியிருந்தனர்.
இந்நிலையில் ஞாயிறு காலை 8.45 மணியளவில் அங்குள்ள கொச்சிக்கடை அந்தோணியார் ஆலயம், நீர்கொழும்பில் உள்ள கட்டுவபிட்டி செபஸ்டியன் தேவாலயம், மட்டகளப்பு பகுதியில் உள்ள தேவாலயம், ஷாங்ரிலா, சினமான் கிராண்ட் மற்றும் கிங்ஸ்பரி நட்சத்திர விடுதிகளிலும் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன.
Advertisement
அதையடுத்து சிறிது நேரத்தில் தெஹிவல என்னும் இடத்தில உள்ள தங்கும் விடுதி ஒன்றிலும், அதையடுத்து குடியிருப்பு பகுதியிலும் வெடிகுண்டுகள் வெடித்தன.
இந்த குண்டுவெடிப்புகளில் சுமார் 156 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சர் ரூவன் விஜயவர்தனே தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் குண்டு வெடிப்பு நடந்த இடங்கள் மட்டும் அல்லாமல் சோதனைகளில் இரண்டு வெடிக்காத குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை குறித்து ஆய்வுகள் நடந்து வருகிறது.
இதுவரை இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.