பெய்ஜிங்: சீனத்தில் புதிதாக 29 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, 40 லட்சம் பேர் வசிக்கும் வடமேற்கு நகரான லான்ஜோ நகரத்தில் இன்று பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
லான்ஜோ நகரில் வசிப்போர் அவசியத் தேவைகளைத் தவிர வேறு எதற்கும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சீனத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் லான்ஜோ நகரில் மட்டும் 6 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.
இது குறித்து லான்ஜோ அதிகாரிகள் கூறுகையில், நகருக்குள் வருவதும், வெளியேறுவதும் கடுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் மற்றும் மருத்துவச் சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, சீனாவில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதையடுத்து, கன்சு மாகாணத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் திங்கள்கிழமை மூடப்பட்டன.
புத்தரின் உருவச் சிலைகள், ஓவியங்கள் நிறைந்த டன்குவாங் கோட்டை மற்றும் பிற மதத் தலங்கள் அதிகம் கொண்ட மாகாணம் ஹன்சு. வடமேற்கு மாகாணமான ஹன்சு, சுற்றுலாவுக்குப் பெயா் பெற்றதாகும். நாட்டில் இங்கு கடந்த ஞாயிறன்று புதிதாக 35 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்களில் 4 போ் ஹன்சுவை சோ்ந்தவா்கள். இதையடுத்து, அந்த மாகாணத்தில் அனைத்து சுற்றுலாத் தலங்களையும் மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
உள்ளூரில் பரவும் கரோனா தொற்றை சீனா பெருமளவில் கட்டுப்படுத்திவிட்டாலும், புதிதாக சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டாலும் பொதுமுடக்கம், தனிமைப்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே, தலைநகா் பெய்ஜிங்கில் 21 பேருக்கு டெல்டா வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சாங்பிங் மாவட்டத்தில் ஒரு குடியிருப்பு பகுதியை நடுத்தர அபாய பகுதியாகவும், மற்றொரு பகுதியை அதிக அபாய பகுதியாகவும் அறிவித்துள்ளது.