முகப்பு
உலகம்

எப்போது குழந்தை பிறக்கும்? புதுமணத் தம்பதிகளைத் துளைக்கும் சீன அரசு

புதுமணத் தம்பதிகளை எப்போது குழந்தை பெற்றுக் கொள்வீர்கள் என்று அரசு கேள்வி கேட்டு துளைத்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Updated On : 28 அக்டோபர், 2022 at 4:37 PM
எப்போது குழந்தை பிறக்கும்? புதுமணத் தம்பதிகளைத் துளைக்கும் சீன அரசு
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:10 PM

ஹாங் காங்: சீனத்தில் மக்கள் தொகையைப் பெருக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், புதுமணத் தம்பதிகளை எப்போது குழந்தை பெற்றுக் கொள்வீர்கள் என்று அரசு கேள்வி கேட்டு துளைத்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சீனாவைச் சேர்ந்த புதுமணத் தம்பதி ஒருவர், அரசிடமிருந்து தங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அதில் பேசியவர், குழந்தை எப்போது பிறக்கும் என்று கேட்டதாகவும் சமூக வலைத்தளத்தில் பதிவிட.. அதற்கு பலரும் தங்களுக்கும் அதுபோன்ற அழைப்பு வந்ததாக கருத்தில் பதிவிட்டு அதிர்ச்சியை அளித்திருக்கிறார்கள்.

நஞ்ஜிங் நகர மகளிர் சுகாதார சேவை மையத்திலிருந்து தன்னுடன் பணியாற்றும் ஊழியருக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், புதிதாக திருமணமான அப்பெண் கருவுற்றிருக்கிறாரா என்று அரசு அதிகாரி கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு அப்பெண் இல்லை என்று பதிலளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கேள்வி எதற்காக கேட்கப்படுகிறது என்று அப்பெண் கேட்டதற்கு, புதுமணத் தம்பதிகள் ஓராண்டுக்குள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் அவ்வாறு புதிதாக திருமணமானவர்களை காலாண்டுக்கு ஒரு முறை நாங்கள் அழைத்து விவரங்களைக் கேட்போம் என்றும் அவர்கள் விளக்கம் அளித்திருந்ததாக சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டிருந்தது.

இது குறித்து நஞ்ஜிங் நகராட்சியிடமிருந்தோ, தேசிய சுகாதார ஆணையத்திடமிருந்தோ இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. ஆனால், இந்த சமூக வலைத்தளப் பதிவுக்கு பலரும் தங்களுக்கும் இதுபோன்ற அழைப்புகள் வந்ததாக கருத்துகள் இட்ட நிலையில், அந்த பதிவு நீக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவுக்கு ஒருவர் கருத்தாக பதிவிட்டிருந்ததில், தனக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணமானதாகவும், இதுவரை இரண்டு முறை இதுபோன்ற அழைப்பு வந்துவிட்டதாகவும் முதல் முறை இரும்புச் சத்து மாத்திரை சாப்பிடுமாறு பரிந்துரை செய்ததாகவும், இரண்டாவது முறை அழைத்த போது, உங்களுக்குத் திருமணமாகிவிட்டது, பிறகு ஏன் குழந்தை பெற்றக் கொள்ள திட்டமிடவில்லை என்று கேள்வி எழுப்பியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மக்கள் தொகைப் பெருக்கத்தால் 1980  - 2015ஆம் ஆண்டு வரை சீனத்தில் ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை என்ற கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதனால், அந்நாட்டில் பெருமளவு மனிதவளம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், நாட்டில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக அந்நாட்டின் குழந்தை பிறப்பு கடுமையாக சரிந்தது. மருத்துவமனைகளுக்குச் செல்ல பயம், பொருளாதார சரவு போன்றவற்றால் தம்பதிகள் குழந்தைப் பேறை தள்ளிப்போடும் நிலைக்கு ஆளாகினர்.

இதனா, சீனத்தில் மக்கள் தொகைப் பெருக்கத்தை அதிகரிக்கும் கொள்கைகள் வகுக்கப்பட்டு வருகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.