முகப்பு
உலகம்

ஹமாஸ் எங்களை நடத்திய விதம்...: விடுவிக்கப்பட்ட இஸ்ரேலிய மூதாட்டி!

ஹமாஸ் இதுவரை 4 பிணைக்கைதிகளை விடுவித்துள்ளது. இன்னும் 220 பேர் ஹமாஸ் பிடியில் இருப்பதாகக் கருதப்படுகிறது.

Updated On : 25 அக்டோபர், 2023 at 11:43 AM
யோச்சீவ்டு லிஃப்ஷிட்ஸ்
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:43 AM

இஸ்ரேல் பாலஸ்தீன போர் 19-வது நாளாகத் தொடர்ந்து வருகிற நிலையில் திங்கள்கிழமை மேலும் இருவரை ஹமாஸ் குழு விடுவித்துள்ளது.

அக்டோபர் 7 நடத்தப்பட்ட இஸ்ரேல் மீதான தாக்குதலில் 1400 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். ஹமாஸ் குழுவினரால் 220 பேர் பிணைக்கைதிகளாகப் பிடித்து செல்லப்பட்டனர்.

கடந்த வாரம், அமெரிக்க பெண்கள் இருவரை விடுவித்த நிலையில், திங்கள்கிழமை இஸ்ரேலைச் சேர்ந்த மூதாட்டிகள் இருவரை விடுவித்துள்ளது, ஹமாஸ்.

Advertisement

85 வயதான யோச்சீவ்டு லிஃப்ஷிட்ஸ் மற்றும் 79 வயதான நூரிட் கூப்பர் காஸாவின் எல்லையில் ஹமாஸ் படையினரால் விடுவிக்கப்பட்டனர். லிஃப்ஷிட்ஸ் தங்களை விடுவித்து சென்ற ஹமாஸ் படையினருக்கு கையசைத்து விடை கொடுத்தார்.

கிட்டதட்ட 2 வாரங்கள் ஹமாஸின் பிடியிலிருந்த அனுபவம் குறித்து லிஃப்ஷிட்ஸ் ஊடகங்களிடம் பேசியுள்ளார். 

இஸ்ரேலின் கிபூஸ் நகரில் இருந்து ஹமாஸ் குழுவின் இளைஞர் ஒருவரால் அக்டோபர் 7-ம் தேதி கடத்தி செல்லப்பட்டார். அவரைத் தாக்கி மோட்டார் பைக்கில் பின்புறமாக ஏற்றி காஸாவுக்குள் அழைத்து சென்றிருக்கின்றனர்.

``என் தலை ஒருபுறமாகவும் உடல் ஒருபுறமாவும் இருந்தது. அவர்கள் என்னைத் தாக்கினர். விலா எலும்புகள் உடையவில்லை எனினும் வலி இருந்தது. மூச்சு விட சிரமப்பட்டேன். நரகத்துக்குள் செல்வது போல இருந்தது. இந்த நிலைக்கு வருவோமென யோசித்தது கூட இல்லை” என்கிறார். மேலும், அவர்கள் கூட்டிச் சென்ற இடத்தில் சிலந்தி வலை போல சுரங்கங்கள் இருந்ததாகவும் எல்லாவற்றையும் அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு செய்திருப்பதாகவும் அவர் கூறுகிறார். குளியல் சோப்பு முதற்கொண்டு அவர்கள் சேகரித்து வைத்திருக்கிறார்கள் என்கிறார்  லிஃப்ஷிட்ஸ்.

ஆனால், பிணைக்கைதிகளான தங்களை மிகவும் நன்முறையில் நடத்தியதாகவும் அவர்கள் உண்கிற உணவையே தங்களுக்கும் பரிமாறியதாகவும் மருத்துவர்கள் கொண்டு சிகிச்சை அளித்ததாகவும் அந்த முதிய பெண்மணி தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, “இஸ்ரேல் இராணுவம் ஹமாஸின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாதன் விளைவே இது. பாதுகாப்பு வேலிகள் எங்களுக்கு எவ்வகையிலும் உதவவில்லை” என இஸ்ரேலையும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஹமாஸை அழிப்பதை விட, பிணைக்கைதிகளை மீட்பதில் இஸ்ரேல் அரசு கவனம் செலுத்த வேண்டும் என அந்நாட்டு மக்கள் உள்ளிட்ட பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.