பாகிஸ்தானுக்குட்பட்ட சிந்து நதியில் தங்கத் துகள் படிமங்களின் இருப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் படிந்துள்ள தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ. 80,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் இமய மலையில் இருந்து உருவாகும் சிந்து நதி பாகிஸ்தான் வழியாகவும் பாய்வதால், தங்கத் துகள்கள் அந்நாட்டிற்கு அடித்துச்செல்லப்பட்டிருக்கும் என்றும், இதில் இந்தியாவுக்கும் பங்குள்ளதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திற்குட்பட்ட அட்டோக் மாவட்டத்தில் பாயும் சிந்து நதியில் தங்கத் துகள் படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் தேசிய பொறியியல் சேவைகள் துறை மற்றும் பஞ்சாப் சுரங்கம் - தனிமங்கள் துறை தலைமையில் சிந்து நதியையொட்டி அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், சிந்து நதியில் தங்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவற்றின் மதிப்பு சுமார் ரூ. 80,000 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இது குறுத்துப் பேசிய பாகிஸ்தானின் தேசிய பொறியியல் சேவைகள் துறை இயக்குநர் ஸர்காம் இசாக் கான், ''சிந்து நதிப் படுகைகளில் உள்ள மண்ணில் ஏராளமான தாதுக்களுடன் தங்கத் துகள்களும் உள்ளன. இப்பகுதியில் வணிக தங்கச் சுரங்கப் பணிகளுக்கான தேவையை இது உறுதிப்படுத்தியுள்ளது'' எனக் குறிப்பிட்டார்.
தங்கத்தில் இந்தியாவுக்கு பங்கு உண்டா?
பாகிஸ்தானின் தங்கம் கண்டறியப்பட்டுள்ள சிந்து நதியானது, இந்தியாவின் இமய மலைகளில் இருந்து உருவாகிறது. சிந்து சமவெளி நாகரிகம் மிகவும் செல்வ வளம் மிக்கது என ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. தங்கம் உள்பட ஏராளமான உலோகங்களை சிந்து சமவெளி மக்கள் பயன்பாட்டில் கொண்டுள்ளனர். சிந்து நதிக்கரையையொட்டி அவர்கள் வாழ்ந்துள்ளனர்.
இமயமலைகளின் பாறைகள் வழியாக மில்லியன் ஆண்டுகளாக வழிந்தோடும் சிந்து நதியில், அரிப்பு ஏற்பட்டு தங்கத் துகள்கள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அந்தவகையில் இந்தியாவில் இருந்தும் தங்கத் துகள்கள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்பதே ஆய்வாளர்களின் கணிப்பாக உள்ளது.
பாகிஸ்தன் பொருளாதாரம் உயரும்
அட்டோக் மாவட்டத்தில் 32 கி.மீ. தூரத்துக்கு சிந்து நதி பாய்கிறது. இதில் மட்டும் 32.6 மெட்ரிக் டன் அளவு தங்கம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கோடை காலம் வரவுள்ளதால் நதியில் தண்ணீரின் அளவு குறையும் என்றும், அப்போது தங்கத் துகள்களை பிரித்தெடுப்பது எளிதான பணியாகவும் இருக்கும் என அகழாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் உள்ளூர் மக்கள் கோடை காலத்தைப் பயன்படுத்தி தங்கம் எடுக்கும் பணிகளில் ஈடுபடலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. முறைகேடான அகழாய்வுகள் நடைபெறுவதைத் தவிர்க்க சில பகுதிகளில் 144 உத்தரவையும் பாகிஸ்தான் அரசு பிறப்பித்துள்ளது.
அந்நிய செலாவணி கையிருப்பு குறைவு, கரன்ஸி மதிப்பு சரிவு என பல்வேறு பொருளாதார சிக்கல்களில் சிக்கித் தவித்துவரும் பாகிஸ்தானுக்கு, இந்த தங்க இருப்பு பெரும் ஆறுதலைக் கொடுத்துள்ளது.
தங்கம் இறக்குமதியைக் குறைத்துவிட்டு, தங்கத்தை அகழாய்வு செய்து பிரித்தெடுக்கும் பணிகளில் பாகிஸ்தான் மும்முரமாகியுள்ளது. இதன்மூலம் சர்வதேச சுரங்கப் பணிகளில் ஈடுபட்டுவரும் நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் சேர்ந்துள்ளது.
இது பொருளாதார உயர்வுக்கு வழிவகுப்பதோடு மட்டுமல்லாமல், அட்டோக் மாவட்டத்தில் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க | இது போர் நடவடிக்கை: டிரம்ப் வரி விதிப்பு குறித்து வாரன் பஃபெட் கருத்து
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.