வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மருத்துவமனையில் அனுமதி!
வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து...
வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில், மூன்று முறை பிரதமராகப் பதவி வகித்த கலீதா ஜியா (வயது 80), பல்வேறு உடல் நல பாதிப்புகளால் கடந்த நவ.23 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், அவரது இதயம் மற்றும் நுரையீரல் தொற்றுகளால் பாதிக்கப்பட்டதால், தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு வங்கதேசம் மற்றும் வெளிநாட்டு மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழு சிகிச்சை அளித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, நீரழிவு நோய், கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பிரச்னை உள்ளிட்ட பாதிப்புகளினால் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.
இதையடுத்து, அவர் உடல்நலம் பெற வேண்டி அவரது ஆதரவாளர்கள் நாளை (நவ. 28) சிறப்பு பிரார்த்தனைகள் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
முன்னதாக, வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் அரசு கவிழ்க்கப்பட்டதால், கலீதா ஜியாவின் பங்களாதேஷ் தேசியவாத கட்சி அந்நாட்டு அரசியலில் முன்னணி கட்சியாக உருவாகியுள்ளது.
மேலும், முன்னாள் பிரதமரான கலீதா ஜியா, வங்கதேசத்தின் மறைந்த முன்னாள் அதிபர் ஜியாவுர் ரகுமானின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: டிட்வா புயல்: இலங்கையில் கனமழை, நிலச்சரிவு, வெள்ளம்! 20 பேர் பலி