நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!
நேபாள முன்னாள் பிரதமர் ஷேர் பகதூர் தேவுபாவை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறித்து...
நேபாள நாட்டின் முன்னாள் பிரதமரான ஷேர் பகதூர் தேவுபா மற்றும் அவரின் மனைவி அர்ஸு ரானா தேவுபா ஆகியோருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில், கடந்த 2025 செப்டம்பரில் அரசுக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய மாபெரும் போராட்டத்தின் மூலம் முன்னாள் பிரதமர் சர்மா ஓலியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து, 2026 மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் இளைஞர்களின் ஆதரவைப் பெற்ற முன்னாள் பாடகர் பாலேந்திர ஷா வெற்றி பெற்று பிரதமராகப் பதவியேற்றார்.
இதனைத் தொடர்ந்து, பாலேந்திர ஷா அரசின் முதல் நடவடிக்கையாக இளைஞர்களின் போராட்டத்தில் 70-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட விவகாரத்தில் முன்னாள் பிரதமர் சர்மா ஓலி உள்ளிட்ட அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இது அந்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
Advertisement
இந்த நிலையில், பண மோசடி வழக்கில் நேபாளத்தின் மற்றொரு முன்னாள் பிரதமரான தேவுபா மற்றும் அவரின் மனைவியும் அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான அர்ஸு ரானா தேவுபா ஆகியோரைக் கைது செய்ய காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இத்துடன், முன்னாள் பிரதமர் தேவுபா மற்றும் அவரின் மனைவி அர்ஸு ரானா தேவுபா ஆகியோர் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த பிப்.26 அன்று சிங்கப்பூர் நாட்டுக்குச் சென்றதாகவும், அவர்கள் இதுவரை தாயகம் திரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது.
முன்னதாக, நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டத்தின்போது முன்னாள் பிரதமர் தேவுபாவின் வீடு போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டு, தீவைக்கப்பட்டது. அப்போது, அவரின் வீட்டிலிருந்து எரிந்த நிலையில் ஏராளமான பணத்தாள்கள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.