நேபாளத்தின் முன்னாள் பிரதமர், உள்துறை அமைச்சர் ஜாமீனில் விடுவிப்பு!
நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஓலி, உள்துறை அமைச்சர் லெகக் ஆகியோர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறித்து...
நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஓலி மற்றும் உள்துறை அமைச்சர் ரமேஷ் லெகக் ஆகியோர் ஜாமீனில் வியாழக்கிழமை (ஏப். 9) விடுவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக கடந்தாண்டு (2025) செப்.8 மற்றும் 9 ஆகிய தேதிகளில், நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்தும், ஊழல் மற்றும் வாரிசு அரசியலை எதிர்த்தும் ஜென் ஸி இளைஞர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர்.
அந்தப் போராட்டத்தில் நடந்த ஒடுக்குமுறை மற்றும் துப்பாக்கிச்சூடு காரணமாக 76 பேர் கொல்லப்பட்டனர்.
Advertisement
இந்த நிலையில், அப்போதைய பிரதமர் சர்மா ஓலியும், சில அமைச்சர்களும் வன்முறை அசம்பாவிதத்துக்கு பொறுப்பேற்று தங்களது பதவியை ராஜிநாமா செய்தனர். அதனைத் தொடர்ந்து நேபாளத்தில் ஆட்சியும் கலைக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், போராட்டக்காரர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட ஒடுக்குமுறையில் பங்கு இருப்பதாகத் தெரிவித்து முன்னாள் நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலி, அப்போதைய உள்துறை அமைச்சர் ரமேஷ் லெகக் ஆகியோர் கடந்த மார்ச் 28 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
விசாரணை தொடர்ந்துவரும் நிலையில், நீதிபதிகள் வினோத் சர்மா மற்றும் சுனில் குமார் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் அமர்வு, ஓலி மற்றும் லெகக் மீதான விசாரணையை வியாழக்கிழமைக்குள் முடிக்க வேண்டும் அல்லது அவர்களைக் காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. அதன்பேரில், தனிநபர் ஜாமீனில் இருவரும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.