எதிரிகளுக்கு மாரடைப்பே ஏற்படும்! - அதிநவீன ஆயுதத்தை களமிறக்குவதாக ஈரான் எச்சரிக்கை!
ஈரானிய ராணுவம் அதிநவீன ஆயுதத்தை விரைவில் களமிறக்குவதாக அறிவிப்பு...
ஈரான் ராணுவம் விரைவில் அதிநவீன ஆயுதத்தை களமிறக்குவதாக, அந்நாட்டு கடற்படைத் தலைவர் ஷஹ்ரம் ஈரானி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளின் கூட்டுத் தாக்குதலைத் தொடர்ந்து வளைகுடா நாடுகளின் முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தி வந்தன. மேலும், சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் படைகள் முடக்கின.
இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தலைமையில் இருதரப்புக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இதனால், ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஈரானிய துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டு வருகிறது.
Advertisement
இந்த நிலையில், எதிரிகள் அஞ்சக்கூடிய வகையில் இதுவரை அல்லாத புதிய அதிநவீன ஆயுதம் ஒன்றை ஈரான் ராணுவம் விரைவில் களமிறக்கும் என ஈரானிய கடற்படையின் தலைவர் ஷஹ்ரம் ஈரானி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி, அவர் கூறியதாவது:
“எதிரிகளுக்கு அச்சம் தரக்கூடிய புதிய ஆயுதத்தை ஈரான் படைகள் விரைவில் களமிறக்கவுள்ளன. அதிர்ச்சியில் எதிரிகளுக்கு மாரடைப்பு எதுவும் ஏற்படாது என நான் நம்புகிறேன். போர் தொடங்கியது முதல் ஈரானிய படைகள் பல்வேறு முக்கிய தளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக 100-க்கும் அதிகமான தாக்குதல் அலைகளை ஈரானிய படைகள் மேற்கொண்டுள்ளன. ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்வதற்கு எதிராளிகளுடன் தொடர்புடைய கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்படாது. எதிராளிகளின் படைகள் மேலும் நெருங்கி வந்தால் அதற்கு ஈரானிய படைகள் உரிய பதிலடி கொடுப்பார்கள்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்கு எதிராக, கடந்த பிப். 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் தெஹ்ரான் உள்ளிட்ட நகரங்களின் மீது தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.