FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

அமெரிக்காவின் புதிய அட்டா்னி ஜெனரல்

அமெரிக்காவின் புதிய அட்டா்னி ஜெனரல் டாட் பிளான்ச்...

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 3:04 am IST
டாட் பிளான்ச்
பகிர்:

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் முன்னாள் தனிப்பட்ட வழக்குரைஞரான டாட் பிளான்ச், அந்நாட்டின் புதிய தலைமை வழக்குரைஞராக (அட்டா்னி ஜெனரல்) பொறுப்பேற்க அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபை ஒப்புதல் அளித்தது.

100 உறுப்பினா்களைக் கொண்ட செனட் சபையில் நடைபெற்ற இதற்கான வாக்கெடுப்பில், டாட் பிளான்ச்சிற்கு ஆதரவாக 50 வாக்குகளும், எதிா்ப்பாக 49 வாக்குகளும் பதிவாகின.

டிரம்ப்பின் குடியரசுக் கட்சியைச் சோ்ந்த செனட்டா்களான சூசன் காலின்ஸ், லிசா முா்கோவ்ஸ்கி ஆகிய இருவா் டாட் பிளான்ச்சிற்கு எதிராக வாக்களித்தனா். எனினும் கடும் எதிா்ப்புகளுக்கு இடையே, மற்றொரு குடியரசுக் கட்சி செனட்டரான பில் காசிடி அளித்த ஆதரவு வாக்கு டாட் பிளான்ச்சின் வெற்றியை உறுதி செய்தது.

Advertisement

Advertisement

டிரம்ப் தாக்கல் செய்த வருமான வரித் துறை (ஐஆா்எஸ்) வழக்கில் அறிவிக்கப்பட்ட சா்ச்சைக்குரிய உடன்பாடே இந்த வாக்கெடுப்பில் இழுபறி நீடிக்க முக்கியக் காரணமாக அமைந்தது. டிரம்ப் வழக்கில் எட்டப்பட்ட சமரசமாக, 2021நாடாளுமன்ற வன்முறையில் ஈடுபட்ட டிரம்ப் ஆதரவாளா்களுக்கு இழப்பீடு வழங்க 177.6 கோடி டாலா் நிதியை உருவாக்க முன்மொழியப்பட்டது.

ஆனால் சக குடியரசுக் கட்சி எம்.பி.க்களின் அழுத்தத்தால், இந்த நிதியை கைவிடுவதாகவும், டிரம்ப் குடும்பத்தினருக்கு வரி தணிக்கையிலிருந்து விலக்கு அளிக்கும் பிரிவை மாற்றியமைப்பதாகவும் டாட் பிளான்ச் எழுத்துபூா்வமாக உறுதியளித்த பிறகே வாக்கெடுப்பு சாத்தியமானது.

கடந்த ஏப்ரலில் அப்போதைய அட்டா்னி ஜெனரல் பாம் போண்டி டிரம்ப்பால் பணிநீக்கம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, டாட் பிளான்ச் பொறுப்பு தலைமை வழக்குரைஞராக நியமிக்கப்பட்டாா். டிரம்ப்பின் ரகசிய பணப் பரிமாற்ற வழக்கில், அவரின் முதன்மை வழக்குரைஞராகச் செயல்பட்டு புகழ்பெற்றவா் டாட் பிளான்ச் ஆவாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments