லிபியாவின் மறைந்த முன்னாள் சர்வாதிகார அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் புதன்கிழமையன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லிபியாவின் முன்னாள் அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் சைஃப் அல் இஸ்லாம் கடாஃபி, வடமேற்கு லிபியாவின் ஜின்டான் நகரில் உள்ள அவரது வீட்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டதாக அவரின் அரசியல் கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். கொல்லப்பட்ட சைஃப் அல் இஸ்லாம் கடாஃபிக்கு வயது 56.
எண்ணெய் வளமிக்க வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வாதிகார ஆட்சி நடத்தியவர் மும்மெர் கடாஃபி. இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரின் போது சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இவரது மறைவுக்குப் பிறகு, கடாபியின் அரசியல் வாரிசாக மகன் சைஃப் அல் இஸ்லாம் பார்க்கப்பட்டார். அப்போது கைது செய்யப்பட்ட சைஃப் பின்னர் 2017 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், சைஃப் அல் இஸ்லாமை வடமேற்கு லிபியாவில் உள்ள ஜின்டான் நகரில் உள்ள அவரது வீட்டுக்குள் புகுந்த கும்பல் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு, தப்பியோடியுள்ளது.
இந்தச் சம்பவம் லிபியாவில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திய நிலையில் இந்தக் கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து எந்த அதிகாரபூர்வத் தகவலும் வெளியாகவில்லை.
சர்வாதிகாரியான கடாபியின் மகனான சைஃப், லிபியாவில் நடைபெறும் பேரழிவு ஆயுதத் திட்டங்களைக் கைவிடுவது குறித்த பேச்சுவார்த்தை நடத்தியதில் பெரும் பங்காற்றினார்.
2011 ஆம் ஆண்டு லிபியாவில் நடைபெற்ற புரட்சிக்குப் பிறகு நீண்ட கால சிறைவாசத்திலிருந்து மீண்ட அவர், அதிபர் தேர்தலில் போட்டியிடவிருந்ததாகவும், அதனால், அவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.