அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இந்தியா அழைப்பு!
அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது குறித்து...
அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
லெபனான், காஸா மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலைக் கண்டித்து அமெரிக்கா உடனான அனைத்துத் தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தைகளையும் நிறுத்திவைப்பதாக ஈரான் அறிவித்ததைத் தொடர்ந்து, இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
மேற்கு ஆசியாவில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை மறுபடியும் கொண்டுவருவதற்காக அமெரிக்க - ஈரான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளதாவது:
''மேற்கு ஆசியாவில் நிகழ்ந்துவரும் முன்னேற்றங்களை கூர்மையாக கவனித்து வருகிறோம். அமைதி மற்றும் நிலைத்தன்மை விரைந்து திரும்புவதற்கு, பேச்சுவார்த்தை மட்டுமே முன்னெடுத்துச் செல்லும் வழி என்பதுதான், மிகத் தொடக்கத்திலிருந்தே எங்களின் நிலைப்பாடாக இருந்து வருகிறது. இரு தரப்புக்கு இடையிலான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டார்.
இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்று வரும் போருக்கான அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தான் மூலம் நடைபெற்று வந்தது.
பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த இந்த பேச்சுவார்த்தையின் விளைவாக ஹோர்முஸ் நீரிணையில் கட்டுப்பாடுகளை ஈரான் தளர்த்தியது. ஈரான் எண்ணெய் வளங்கள் மீதான தடையையும் அமெரிக்கா ரத்து செய்தது.
எனினும் ஈரான் சில கோரிக்கைகளை முன்வைத்து, அதற்கு அமெரிக்கா உடன்பட்டால் மட்டுமே போர் நிறுத்தம் குறித்து பரிசீலனை செய்யப்படும் என ஈரான் தெரிவித்திருந்தது.
பேச்சுவார்த்தையை சுமூகமாக அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்தும் முயற்சிகளில் வாஷிங்டன் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது அமெரிக்கா உடனான அனைத்துத் தரப்பு பேச்சுவார்த்தைகளையும் நிறுத்திவைப்பதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது.
லெபனான், காஸா மீது இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், அதனை நிறுத்தும் வரை மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்காது எனவும் குறிப்பிட்டுள்ளது.