லண்டனில் யூதர்களுக்குச் சொந்தமான ஆம்புலன்ஸ்களுக்கு தீவைப்பு!
லண்டனில் யூதர்களுக்குச் சொந்தமான ஆம்புலன்ஸ்களுக்கு மர்மநபர்கள் தீவைத்தது பற்றி...
லண்டனில் யூத அமைப்புக்குச் சொந்தமான 4 ஆம்புலன்ஸ்களுக்கு மர்ம நபர்கள் தீவைத்ததாக இன்று காலை செய்தி வெளியாகியுள்ளது.
லண்டனில் யூதர்கள் அதிகமாக வசிக்கும் கோல்டர்ஸ் க்ரீன் பகுதியில் அவசரநிலை மருத்துவ உதவிக் குழுவான ஹட்ஸோலா நார்ட்வெஸ்ட் எனும் யூத அமைப்புக்குச் சொந்தமான 4 ஆம்புலன்ஸ்களுக்கு தீவைக்கப்பட்டுள்ளது.
ஆம்புலன்ஸ்களில் இருந்த பல சிலிண்டர்கள் வெடித்ததால் அருகிலிருந்த வீடுகளின் ஜன்னல்கள் உடைந்துள்ளன. இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
இந்தச் சம்பவத்திற்குக் காரணமான மர்ம நபர்கள் யாரென்று தெரியாத நிலையில் தீவைப்பு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இதனை, யூத வெறுப்புக் குற்றமாகக் கருதுவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதுதொடர்பாகப் பேசிய காவல்துறையினர், “இந்தச் சம்பவம் சமூகத்தில் பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவசர நடவடிக்கை எடுக்க விசாரணை நடத்தி வருகின்றோம். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. குற்றவாளிகளைத் தேடிக் கொண்டிருக்கிறோம். சிலிண்டர் வெடித்ததால் அருகிலிலுள்ள வீடுகளில் மக்களை காலி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளோம்” என்று கூறினார்.
யூத சமூகப் பாதுகாப்பு அறக்கட்டளை தெரிவித்துள்ள தகவலின்படி, இஸ்ரேல் - ஹமாஸ் போர் காரணமாக கடந்த 2023 முதல் யூதர்களுக்கு எதிரான குற்றங்கள் பிரிட்டனில் அதிகரித்து வருகின்றன. யூதர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் குற்றங்கள் கடந்த 2022 இல் 1,662 ஆக இருந்த நிலையில் 2025-ல் அது 3,700 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
யோம் கிப்பூர் என்னும் யூதப் பண்டிகை கொண்டாட்டம் பிரிட்டனில் மான்செஸ்டர் சினகோக் என்ற இடத்தில் கடந்த அக்டோபர் 2025-ல் நடைபெற்றது. அப்போது, மக்கள் கூடியிருந்த இடத்தில் காரை வேகமாக ஓட்டிவந்து விபத்து ஏற்படுத்திய நபர் அங்கிருந்த ஒருவரைக் கத்தியால் குத்தினார். தாக்குதலின்போது காவல்துறையினர் தவறாகச் சுட்டத்தில் மேலும் ஒரு நபர் பலியானார். இந்த விபத்து யூதர்கள் பாதுகாப்புத் தொடர்பாக பெரிய விவாதமாக மாறியது.
Vehicles belonging to Jewish ambulance service set on fire in London
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.