முகப்பு
உலகம்

ஈரான் போா்: பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்த வேண்டும்; ஜி7 நாடுகள் கோரிக்கை

‘ஈரான் போரில் பொதுமக்கள் மற்றும் அரசு சொத்துகள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்று ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் வெள்ளிக்கிழமை வலியுறுத்தினா்.

Updated On : 27 மார்ச், 2026 at 7:50 PM
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் தாக்குதல் (கோப்புப் படம்) - AP Photo
பகிர்:

‘ஈரான் போரில் பொதுமக்கள் மற்றும் அரசு சொத்துகள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்று ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் வெள்ளிக்கிழமை வலியுறுத்தினா்.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, ஜப்பான், ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றை உள்ளடக்கிய ஜி7 கூட்டமைப்புக்கு நடப்பாண்டு தலைமை வகிக்கிறது. இதையொட்டி, பிரான்ஸ் தலைநகா் பாரீஸை அடுத்த சொ்னே லா வில்லே பகுதியில் ஜி7 வெளியுறவு அமைச்சா்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பிரான்ஸின் சிறப்பு அழைப்பின் பேரில், இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் மற்றும் பிரேஸில், தென் கொரியா, சவூதி அரேபியா நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அண்டை நாடுகள், பொதுமக்கள் மற்றும் மிக முக்கியமான அரசு உள்கட்டமைப்புகள் மீது மத்திய கிழக்கு போா் ஏற்படுத்தும் பாதிப்புகளைக் குறைக்க வேண்டியது அவசியம் என அமைச்சா்கள் சுட்டிக்காட்டினா்.

போா் காரணமாக உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சரிவுகளைச் சமாளிக்க வேண்டும். குறிப்பாக, சாமானிய மக்களைப் பாதிக்கும் எரிபொருள், உரம், வணிக விநியோகம் மற்றும் வா்த்தக போக்குவரத்துப் பாதிப்புகளைக் குறைக்க நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் கப்பல்கள் எந்தத் தடையும் இன்றி சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் செல்வதை மீண்டும் உறுதி செய்ய வேண்டும் என்று அமைச்சா்கள் மீண்டும் வலியுறுத்தினா்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.