ஆப்கனில் கடும் வெள்ளம்: 17 பேர் பலி!
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளம் காரணமாக 17 பேர் பலியானது பற்றி...
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளம் காரணமாக 17 பேர் பலியாகினர்.
ஆப்கானிஸ்தானில் மோசமான வானிலை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழையால் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 17 பேர் பலியானதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதில், 26 பேர் காயமடைந்துள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெள்ளத்தின் காரணமாக ஆப்கனில் உள்ள 34 மாகாணங்களில் மேற்கு, மத்திய மற்றும் வடமேற்கு பகுதிகளில் உள்ள 12 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி, 147 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 80 கி.மீ தொலைவிலான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதாகவும் பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் செய்தித் தொடர்பாளர் யூசுப் ஹம்மாத் தெரிவித்தார்.
இந்தாண்டின் தொடக்கத்தில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் வெள்ளத்தின் காரணமாக பலர் பலியான நிலையில் மீண்டும் ஆப்கனில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் கடுமையான வானிலையால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடு. அங்கு ஏற்படும் கனமழை, வெள்ளம் காரணமாக பல நூறு மக்கள் வரை பலியாகும் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.
கடந்த 2024-ம் ஆண்டில் கூட கடும் வெள்ளப்பெருக்கின் காரணமாக 300-க்கும் மேற்பட்ட மக்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகளாக நடைபெறும் மோதலகள், மோசமான உள்கட்டமைப்பு, சீரற்ற பொருளாதாரம், காடுகள் அழிக்கப்பட்டது மற்றும் மோசமான காலநிலை மாற்றம் ஆகியவற்றால் ஆப்கானிஸ்தானில் பேரிடர்களின் தாக்கம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, அங்கு பல வீடுகள் மண்ணால் கட்டப்பட்டுள்ளதால் திடீர் பெருவெள்ளம் அல்லது கடும் பனிப்பொழிவு போன்ற பேரிடர்களில் இருந்து மிகக் குறைந்த பாதுகாப்பையே அவை வழங்குகின்றன.