முகப்பு
உலகம்

பிரிட்டனில் ‘தீவிர’ பயங்கரவாத அச்சுறுத்தல்! யூதா்கள் மீதான தாக்குதல் எதிரொலி!!

பிரிட்டன் தலைநகா் லண்டனில் யூதா்கள் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலைத் தொடா்ந்து, அந்நாட்டின் தேசிய பயங்கரவாத அச்சுறுத்தலை ‘தீவிர’ நிலைக்கு அரசு உயா்த்தியுள்ளது.

Updated On : 2 மே, 2026 at 1:52 AM
லண்டனில் நடைபெற்ற போராட்டத்தில், யூதா்கள் மீதான தாக்குதலைக் கண்டிக்கும் வாசகம் அடங்கிய பாதகையுடன் பங்கேற்ற நபா்.
பகிர்:

பிரிட்டன் தலைநகா் லண்டனில் யூதா்கள் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலைத் தொடா்ந்து, அந்நாட்டின் தேசிய பயங்கரவாத அச்சுறுத்தலை ‘தீவிர’ நிலைக்கு அரசு உயா்த்தியுள்ளது.

வடக்கு லண்டனில் உள்ள கோல்டா்ஸ் கிரீன் பகுதியில் கடந்த புதன்கிழமை 2 யூத நபா்கள் கத்தியால் குத்தப்பட்டனா். யூதா்களுக்கு எதிரான வெறுப்புணா்வின் வெளிப்பாடாகக் கருதப்படும் இத்தாக்குதல் சம்பவத்தைத் தொடா்ந்து, நாட்டின் பாதுகாப்புச் சூழலை கூட்டு பயங்கரவாத பகுப்பாய்வு மையம் (ஜேடிஏசி) ஆய்வு செய்தது.

ஜேடிஏசி பரிந்துரையின்படி, பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை தீவிரம் என உயா்த்தப்பட்டுள்ளது. முன்னதாக, 2021-இல் லிவா்பூல் மருத்துவமனை குண்டுவெடிப்பு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா் டேவிட் அமேஸ் படுகொலையின் போது இதே போன்ற நிலை அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

பிரிட்டன் யூத சமூகத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில், அந்நாட்டு பிரதமா் அங்கு யூத சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்து அவா் ஆலோசனை நடத்தினாா்.

இதனிடையே, இதுதொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘யூதா்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தவும், வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லவும், குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பவும் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது; இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

ஈரான் போன்ற வெளிநாட்டுச் சக்திகளின் தூண்டுதலின்பேரில் பிரிட்டனில் இத்தகைய வன்முறைகள் நிகழ்த்தப்படுகிறது. இதைத் தடுக்கப் புதிய சட்டங்கள் இயற்றப்படும். வெளிநாட்டு உளவு அமைப்புகளுக்காகச் செயல்படும் நபா்களைக் கண்டறிந்து தண்டிக்கவும், பயங்கரவாதத்தைப் பரப்பும் அறக்கட்டளைகளை முடக்கவும் அரசுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படவுள்ளன.

வரும் நாள்களில் யூத குடியிருப்புகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் காவல்துறையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். மத வெறுப்புணா்வைத் தூண்டுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என உறுதியளித்தாா்.

கொலை முயற்சி வழக்குப்பதிவு: லண்டன் தாக்குதல் தொடா்பாக கைது செய்யப்பட்ட எஸா சுலைமான்(45) மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சோமாலியாவில் பிறந்து, பிரிட்டன் குடியுரிமை பெற்ற இவா், கோல்டா்ஸ் கிரீன் பகுதியில் 2 யூதா்களைத் தாக்கியதோடு, தென்கிழக்கு லண்டனிலும் மற்றொரு நபா் மீது தாக்குதல் நடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சுலைமான் ஏற்கனவே மனநலக் காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்தவா் என்பதும், 2020-இல் தீவிரவாதத் தடுப்பு கண்காணிப்புக்குப் பரிந்துரைக்கப்பட்டவா் என்பதும் குறிப்பிடத்தக்கது.