இஸ்ரேல் தாக்குதலில் புதிய தலைவர் கொலை! உறுதி செய்த ஹமாஸ்!
இஸ்ரேல் தாக்குதலில் புதிய ஆயுதப்படைத் தலைவர் கொல்லப்பட்டதை ஹமாஸ் படையினர் உறுதி செய்துள்ளனர்...
இஸ்ரேலின் தாக்குதலில், தங்களின் புதிய ஆயுதப்படைத் தலைவர் கொல்லப்பட்டதை ஹமாஸ் படையினர் உறுதி செய்துள்ளனர்.
காஸாவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் ஆயுதப்படையின் புதிய தலைவரான முகமது ஓடே கொல்லப்பட்டதாக, இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஹமாஸ் ஆயுதப்படைத் தலைவர் முகமது ஓடே மற்றும் அவரின் மனைவி, 2 குழந்தைகள் உள்பட 5 பேர் செவ்வாய்க்கிழமை அன்று நடத்தப்பட்ட இஸ்ரேலிய படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்து ஹமாஸ் அமைப்பு இன்று (மே 27) அறிக்கை வெளியிட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்தத் தாக்குதலானது இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகைக்கு முந்தைய நாள் நடத்தப்பட்டதற்கு, பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கொல்லப்பட்ட முகமது ஓடே மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு இன்று இறுதிச் சடங்கு நடைபெற்றது.
கொல்லப்பட்டவர்களின் உடல்கள் மீது ஹமாஸ் அமைப்பின் கொடிகள் போர்த்தப்பட்ட ஊர்வலமாகக் கொண்டுச் செல்லப்பட்டன. இந்த இறுதி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்று முழக்கங்கள் எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, 2 வாரங்களுக்கு முன்பு ஹமாஸ் ஆயுதப்படையின் முன்னாள் தலைவர் இஸ்-அல்-தின்-அல்-ஹதாத் கடந்த மே 15 அன்று இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
அவரைத் தொடர்ந்து, ஆயுதப்படைத் தலைவராகப் பதவியேற்ற ஓடே, அக்டோபர் 7 தாக்குதலின்போது உளவுத்துறையின் தலைவராகப் பணியாற்றியதாக, இஸ்ரேல் அரசு குற்றஞ்சாட்டுவது குறிப்பிடத்தக்கது.