சிலிமே சுரங்கத்தில் தற்காலிகப் பாதை: இந்தியா-நேபாளம் இணைந்து தீவிர மீட்புப் பணி!
கனரக இயந்திரங்கள் நுழைய தற்காலிகப் பாதை அமைக்கும் இந்திய–நேபாள மீட்புக் குழு...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரசுவா மாவட்டத்தில் உள்ள சிலிமே சுரங்கத்துக்குள், கூடுதல் கனரக இயந்திரங்களைப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குக் கொண்டு செல்ல இந்தியச் சுரங்க மீட்புக் குழுவினர் நேபாள ராணுவத்துடன் இணைந்து தற்காலிகப் பாதையை அமைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேபாளத்திற்கான இந்தியத் தூதர் நவீன் ஸ்ரீ வாஸ்தவாவின் எக்ஸ் பதிவில்,
நேபாளத்தில் ஆகஸ்ட் 26ல் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் மீட்புப் பணிகள் 11-வது நாளாக நடைபெற்று வருகின்றது. சிலிமே பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், நேபாள ராணுவத்துடன் இணைந்து இந்தியச் சுரங்கப் பாதை மீட்புக் குழுவினர் பணியாற்றி வருகின்றனர்.
Advertisement
Advertisement
வெள்ளிக்கிழமை சிலிமே சுரங்கப் பாதையில் ஆழமாகத் தோண்டி நீரை வெளியேற்றினர். சுரங்கத்துக்குள் கூடுதல் கனரக இயந்திரங்கள் செல்வதற்கு ஏதுவாக தற்காலிகப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. அத்துடன், இக்குழுவில் உள்ள மருத்துவர்கள் உள்ளூர் மக்களுக்காக மருத்துவ முகாம் ஒன்றையும் நடத்தினர் இவ்வாறு அவர் கூறினார்.
நேபாளத்தின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் பலியானோர் எண்ணிக்கை 1,344 ஆக உயர்ந்துள்ளது. 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். மேலும், வீடுகள், சாலைகள், பாலங்கள் மற்றும் நீர்மின் திட்டங்கள் சேதமடைந்தன. இதனைத் தொடர்ந்து நேபாளத்திற்கு உதவ இந்தியா சிறப்பு மீட்புக் குழுக்களை அனுப்பியுள்ளது.
பேரிடர் ஏற்பட்டதிலிருந்து பல்வேறு நீர்மின் திட்டப் பகுதிகளில் காணாமல் போன தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களைக் கண்டறிய இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த நிபுணர் குழுக்கள் நேபாளத்தின் மீட்புக் குழுக்களுக்கு உதவி வருகின்றன. இவர்களில் பலர் சுரங்கப் பாதைகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
நேபாள-திபெத் எல்லைக்கு அருகில் பனிப்பாறைகள் சரிந்ததன் காரணமாகவே இந்தத் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தில் உள்ள சுமார் 12 நீர்மின் திட்டப் பகுதிகளில் குறைந்தது 900 தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர். இவர்களில் சுமார் 500 பேர் சுரங்கப் பாதைகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
திடீர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ரசுவா மாவட்டத்தில் உள்ள சியாப்ருபெசி கிராமத்திற்கு அருகில் சிலிமே நீர்மின் திட்ட வளாகம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.