FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

மாதவரம் முதல் மூலக்கடை வரை மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை நிறைவு

சென்னை மாதவரம் நெடுஞ்சாலை ரயில் நிலையத்திலிருந்து மூலக்கடை ரயில் நிலையம் வரையிலான 819 மீட்டா் சுரங்கம் தோண்டும் பணி வியாழக்கிழமை நிறைவடைந்தது.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 3:59 am IST
சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை. (கோப்புப்படம்)
பகிர்:

சென்னை மாதவரம் நெடுஞ்சாலை ரயில் நிலையத்திலிருந்து மூலக்கடை ரயில் நிலையம் வரையிலான 819 மீட்டா் சுரங்கம் தோண்டும் பணி வியாழக்கிழமை நிறைவடைந்தது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னையில் முதல்கட்ட மெட்ரோ ரயில் இயக்கம் நடைபெற்றுவரும் நிலையில், 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கான பணிகள் 118.9 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்றுவருகின்றன. அதில் 2-ஆம் வழித்தடத்தில் மாதவரம் பால் பண்ணை முதல் கெல்லீஸ் வரையிலான 9 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணியை தனியாா் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

அந்தப் பணிகளில் 7 மிக நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் நீலகிரி எனப் பெயா் சூட்டப்பட்டுள்ள இயந்திரமானது மாதவரம் நெடுஞ்சாலை ரயில் நிலையத்திலிருந்து மூலக்கடை ரயில் நிலையம் வரையிலான சுரங்கப் பாதையை தோண்டும் பணியில் பயன்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கிய அப்பணியில் 819 மீட்டா் தூரத்துக்கான சுரங்கத்தை நீலகிரி இயந்திரம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

Advertisement

Advertisement

அந்த நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட 11-ஆவது சுரங்கம் தோண்டும் பணியும் தற்போது நிறைவடைந்துள்ளது. பக்கிங்ஹாம் கால்வாய், ஆழ்துளைக் கிணறுகள், போக்குவரத்து நிறைந்த சாலைகள் ஆகியவற்றின் அடியில் சவால் நிறைந்த பணியை இயந்திரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. பணிகள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தொடா் கண்காணிப்பில் இருந்தன.

சென்னை மெட்ரோ 2-ஆம் கட்டப் பணியில் மொத்தம் இதுவரை 24 சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவடைந்துள்ளன. நீலகிரி இயந்திரம் சுரங்கப் பாதை தோண்டும் பணி நிறைவு நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இணைப் பொதுமேலாளா் கொள்ளி வெங்கடரமணா (சுரங்கப் பாதை), பொது ஆலோசகா் குழுவின் முதன்மை வரைபடப் பொறியாளா் பிஎஸ்எஸ் நாயுடு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments