முகப்பு
சென்னை

மணலியில் ரம்மி விளையாட்டில் ரூ.20 லட்சத்தை இழந்த பெயிண்டர் தற்கொலை

ரம்மி விளையாட்டில் ரூ.20 லட்சத்தை இழந்த பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.

Updated On : 17 ஜூன், 2022 at 11:50 AM
பகிர்:

திருவொற்றியூர்: ரம்மி விளையாட்டில் ரூ.20 லட்சத்தை இழந்த பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து காவல் துறை தரப்பில் கூறப்படுவதாவது:

மணலி அண்ணா தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன் வயது (37). இவரது மனைவி பெயர் வரலட்சுமி (8). ஆறு வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர் பெயிண்டிங் காண்ட்ராக்ட் எடுத்து ஆட்களை வைத்து பணி செய்வது வழக்கம். கடந்த சில மாதங்களாக இவருக்கு ரம்மி விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்பட்டு அதில் தீவிரமாக விளையாடிக் கொண்டிருந்தார்.

Advertisement

இதனால் இவருக்கு ஏராளமான பணம் இழப்பு ஏற்பட்டதாக தெரிகிறது . உறவினர்கள், நண்பர்கள் என பலரிடம் கடன் வாங்கி உள்ளார். மேலும் மனைவியின் நகைகளையும் அடகு வைத்துள்ளார். ரூ.20 லட்சம் வரை கடன் இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து மனைவி வரலட்சுமி அவருடன் பிரச்னை செய்து  உறவினர்களிடம் இது குறித்து கூறியுள்ளார். கடந்த இரண்டு  நாள்களுக்கு முன்பாக உறவினர்களும் வந்து ரம்மி விளையாட்டை விட்டு விடுமாறு அறிவுரை கூறியுள்ளனர்.

அவரது சகோதரரும், பெற்றோரும் இவர் வீட்டு மாடியிலேயே உள்ளனர். இவரால் ரம்மி விளையாட்டை விட முடியாத ஒரு நிலை இருந்ததால் செல்லிடைப்பேசியை அவர் அடகு கடையில் அடகு வைத்து உள்ளார். இருந்தாலும் தனக்கு ஏற்பட்ட கடனுக்கு ரம்மி விளையாட்டு தான் காரணம் என மன உளைச்சலில் அவதிப்பட்டு வந்துள்ளார். நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவரது மனைவி  வந்து பார்த்த போது கணவர் தூக்கில்  தொங்கி கொண்டிருந்தார். அவரது மனைவி உடனே தனது உறவினர்களை அழைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.  ஆனால் வழியிலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது என்று மருத்துவர்கள் பரிசோதனை செய்து அவர் இறந்துவிட்டதாக கூறினார்.

அவர் ஒரு டைரியில் தனக்கு ஏற்பட்ட கடன்கள் குறித்தும், ரம்மி விளையாட்டு குறித்தும் எழுதி வைத்ததாக கூறப்படுகிறது. அதை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். ரம்மி விளையாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டதாரி பெண் ஒருவர் இறந்தது குறிப்பிடத்தக்கது.

இப்போது ரம்மி விளையாடி பெயிண்டர் ஒருவர் இறந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரம்மி விளையாட்டை தடை செய்வது குறித்து மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஆலோசனை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.