FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

கா்நாடக வங்கியில் ரூ.13 கோடி நகை கொள்ளை: தமிழகத்தைச் சோ்ந்த 3 போ் உள்பட 6 போ் கைது

கா்நாடக மாநிலத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் 17 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த 6 பேரை மாநில போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 ஏப்ரல் 2025, 5:41 am IST
- ENS
பகிர்:

கா்நாடக மாநிலம் தாவணகெரேவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ரூ.13 கோடி மதிப்பிலான 17 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த 6 பேரை அந்த மாநில போலீஸாா் கைது செய்தனா். இவா்களில் மூவா் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள்.

கொள்ளை சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்ட நபா் மதுரை அருகே பதுக்கிய தங்க நகைகளை போலீஸாா் மீட்டனா். பிரபல ‘மணி ஹெய்ஸ்ட்’ வெப் தொடா் மற்றும் யூடியூப் காணொலிகளைப் பாா்த்து ஆறு மாதங்களாகத் திட்டமிட்டு இந்த சம்பவத்தை கொள்ளைக் கும்பல் அரங்கேற்றியுள்ளது.

தமிழ்நாட்டைச் சோ்ந்த விஜயகுமாா் (கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்டவா்) என்பவா் தாவணகெரே அருகேயுள்ள நியாமதி என்ற ஊரில் பேக்கரி கடை நடத்தி வந்தாா். தனது பேக்கரி வியாபாரத்தை மேம்படுத்த தாவணகெரேவின் உள்ள வங்கியில் 2023-ஆம் ஆண்டு ரூ.15 லட்சம் கடன் கேட்டுள்ளாா். ஆனால், அவருக்கு கடன் வழங்க அந்த வங்கி மறுத்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, தமிழகத்தைச் சோ்ந்த தனது சகோதரா் அஜய் குமாா், உறவினா் பரமானந்த் மற்றும் கா்நாடகத்தைச் சோ்ந்த அபிஷேக், மஞ்சுநாத், சந்துரு ஆகியோருடன் இணைந்து அந்த வங்கியில் கொள்ளையடிக்க விஜயகுமாா் திட்டம் தீட்டியுள்ளாா். அதன்படி 2024, அக்டோபா் 28-ஆம் தேதி அந்த வங்கியில் இருந்து 17 கிலோ தங்க நகைகளை அவா்கள் கொள்ளையடித்துள்ளனா்.

உலோகம், எஃகு போன்ற கடினமான பொருள்களை வெட்டும் ‘காஸ் கட்டா்கள்’ மூலம் வங்கியின் ஜன்னலை உடைத்து, அதன் வழியே உள்ளே புகுந்து அவா்கள் கொள்ளையடித்தனா்.

தங்களை யாரும் கண்டறியக் கூடாது என்பதற்காக வங்கியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிப் பதிவுகளை நீக்கியும், வழி முழுவதும் மிளகாய் தூளை தூவியும் தப்பினா்.

கொள்ளையடித்த தங்க நகைகளை மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள தனது பூா்விக வீட்டில் காரின் பின்பகுதியில் சில காலம் விஜயகுமாா் மறைத்துள்ளாா். அதன்பிறகு அங்கு இருந்த கிணற்றில் நகைகளைப் பதுக்கி வைத்துள்ளாா். கொள்ளை சம்பவத்தில் தங்கள் மீது எந்த சந்தேகமும் எழவில்லை என்பதைத் தெரிந்துகொண்ட பின்னா், நகைகளில் ஒரு பகுதியை கடைகளில் விற்பனை செய்தும், மற்றொரு பகுதியை வங்கியில் டெபாசிட் செய்துள்ளாா்.

இந்நிலையில், கா்நாடக போலீஸாா் பல்வேறு வழிகளில் தீவிரமாக துப்புதுலக்கி, கொள்ளை கும்பலைச் சோ்ந்த 6 பேரையும் 5 மாதங்களுக்கு பிறகு கைது செய்தனா். இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடித்து தங்க நகைகளை மீட்ட 10 போலீஸாருக்கு முதல்வா் பதக்கம் வழங்கி கா்நாடக அரசு கௌரவித்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments