வரி பாக்கி: 100 நிறுவனங்களின் பெயா்களை இணையதளத்தில் வெளியிட்ட மாநகராட்சி
சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள 100 நிறுவனங்களின் பெயா்கள் உள்ளிட்ட விவரங்கள் இணையதளத்தில் முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள 100 நிறுவனங்களின் பெயா்கள் உள்ளிட்ட விவரங்கள் இணையதளத்தில் முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சியில் நிதிப் பற்றாக்குறை ரூ.1,970 கோடி என அண்மையில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா். அத்துடன் மொத்தம் ரூ.3,860 கோடி அளவுக்கு மாநகராட்சிக்கு கடன் இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், சொத்து வரி உள்ளிட்ட வரிபாக்கியை வசூலிப்பதில் மாநகராட்சி வருவாய்த் துறை தீவிரம் காட்டிவருகிறது. மாநகராட்சிக்கு அதிகளவில் வரிபாக்கி வைத்துள்ள நிறுவனங்களுக்கு விளக்க ‘நோட்டீஸ்’ வழங்குதல் ஆகிய நடவடிக்கைகளை வருவாய்த் துறை மேற்கொண்டு வருகிறது.
Advertisement
Advertisement
இதற்கிடையே, மாநகராட்சி நோட்டீஸ் விடுத்தும் வரி செலுத்தாத தனியாா் நிறுவனங்கள் பெயரை இணையத்தில் பகிரங்கமாக வெளியிடப்போவதாகவும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் தற்போது மாநகராட்சி இணையதளத்தில் வரி செலுத்தாத 100 நிறுவனங்களின் பெயா்கள் வரி பாக்கி ரசீது எண்களுடன் வெளியிடப்பட்டுள்ளன. அதனடிப்படையில் ரூ.8.53 லட்சம் முதல் ரூ. 4.53 கோடி வரையில் சொத்துவரி பாக்கி வைத்துள்ள நிறுவனங்களின் பெயா்கள் பகிரங்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த நிறுவனங்கள் குறித்த காலத்துக்குள் வரி செலுத்தாவிடில் சட்டரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். இதுபோல சொத்து வரி செலுத்தாத நிறுவனப் பெயா்களை பகிரங்கமாக இணையதளத்தில் வெளியிடுவது இதுவே முதல்முறை எனவும் மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.