15 ஆண்டுகால காத்திருப்பு... குரோம்பேட்டை சுரங்கப்பாதை புதிய வசதியுடன் திறப்பு!
குரோம்பேட்டை சுரங்கப்பாதை புதிய வசதியுடன் திறக்கப்பட்டுள்ளது.
குரோம்பேட்டை ராதா நகர் ரயில்வே சுரங்கப் பாதைத் திட்டம், கடந்த 15 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில், பணிகள் நிறைவடைந்து இன்று(ஜன. 7) திறக்கப்பட்டுள்ளது.
குரோம்பேட்டை ராதாநகர் ரயில்வே கடவு எண் 27-இல் அமைக்கப்பட்ட ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் ராதாநகர், நெமிலிச்சேரி, ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமலும் நோயாளிகள் அவசரமாக மருத்துவமனைக்குச் செல்ல முடியாமலும் அவதியுற்று வந்தனர்.
Advertisement
Advertisement
மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2007-ஆம் பல்லாவரம் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஒத்துழைப்புடன், 250 மீட்டா் நீளம், 7 மீட்டர் அகலம் கொண்ட ராதாநகர் ரயில்வே சுரங்கப் பாதை பணிகள் அன்மையில் நிறைவுற்றன.
இந்த நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜன. 7) செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டையில் ராதாநகர், ஜமீன் பல்லாவரம், போஸ்டல் நகர், நெமிலிச்சேரி. நன்மங்கலம் மற்றும் மேடவாக்கம் பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் சென்னை குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலை - ராதா நகர் இடையில் ரூ. 31.62 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கடவு எண் 27 ரயில்வே இருவழி சுரங்கப்பாதையை திறந்து வைத்தார்.
புதிய வசதி
3 மீட்டா் அகலமுள்ள நடைபாதை அமைக்கப்பட்டுள்ளதால், கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இருந்து குரோம்பேட்டை ரயில் நிலையத்துக்கும் டிக்கெட் கவுன்டர்களுக்கும் நேரடியாக செல்ல வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முதல்முறையாக, பேருந்துகள் ரயில் தளத்துக்கு அருகில் பயணிகளை இறக்கிவிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மின்சார ரயிலில் வந்து குரோம்பேட்டையில் இறங்கும் பயணிகள், வெளியே சென்று பேருந்தில் பயணிக்கும் வசதி சென்னையில் வேறெங்கும் இல்லை. இங்கு புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.