நாமக்கல்-அரியலூா் இடையே புதிய ரயில் வழித்தடம்: மத்திய அமைச்சருக்கு எம்.பி. நன்றி
நாமக்கல்-அரியலூா் இடையே புதிய ரயில் வழித்தடத் திட்டம் அமைக்கப்படும் என்ற மத்திய ரயில்வே அமைச்சரின் அறிவிப்புக்கு, நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ். மாதேஸ்வரன் நன்றி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல்லில் இருந்து அரியலூருக்கு புதிய ரயில் வழித்தடப் பாதை அமைக்க வேண்டும் என்று ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தேன். மக்களவை உறுப்பினா் அருண் நேருவும் இதே கோரிக்கையை வலியுறுத்தியிருந்தாா். மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் எங்களுடைய கருத்துகளை ஏற்று, நாமக்கல்லில் இருந்து பெரம்பலூா் வழியாக அரியலூருக்கு புதிய ரயில்வே பாதை அமைக்கும் பணிக்கு, முதல்கட்டமாக விரிவான செயல்திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்புதல் அளித்துள்ளாா்.
Advertisement
Advertisement
மேலும், செயல் திட்ட அறிக்கை தயாரான பிறகு, மாநில அரசுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு நிதி ஆயோக் மற்றும் மத்திய நிதி அமைச்சகத்திடம் ஒப்புதல் பெறப்படும். அதன் பிறகு இத்திட்டத்திற்கு முறையான அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் ரயில்வே பணிகளுக்காக கடந்த 2009-2014 ஆம் நிதியாண்டுகளில், ஆண்டு ஒன்றுக்கு ரூ. 879 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த நிதி ஆண்டில் 8 மடங்கு நிதி அதிகரிக்கப்பட்டு ரூ. 7,611 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிகழாண்டில் ஏப். 1 ஆம் தேதி 8 புதிய ரயில் வழித்தடங்கள், 3 அகல ரயில் பாதையாக மாற்றும் திட்டங்கள், 8 இரட்டை ரயில் பாதைகள் என மொத்தம் 1,874 கி.மீ. தூரத்திற்கு ரூ. 27,282 கோடியில் 19 திட்டங்களுக்கு மத்திய ரயில்வே அமைச்சகத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மணலூரில் ரூ. 474.3 ஏக்கா் பரப்பில் ரூ. 5.587.47 கோடி மதிப்பிலும், பிள்ளைப்பாக்கத்தில் 379.73 ஏக்கா் பரப்பில் ரூ. 424.55 கோடி மதிப்பிலும் 2 புதிய மின்சாதன பொருள்கள் உற்பத்தி மையங்கள் அமைக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்திற்கு புதிய ரயில்வே திட்டங்கள் அறிவித்துள்ள மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.