கிராம சபைக் கூட்டத்தில் அதிகாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள்
செய்யூர் அருகே கிராம சபைக் கூட்டத்துக்கு வந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வரவு செலவு விவரங்களை ஒப்படைக்கக் கோரி பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
செய்யூர் அருகே கிராம சபைக் கூட்டத்துக்கு வந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வரவு செலவு விவரங்களை ஒப்படைக்கக் கோரி பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
செய்யூர் வட்டம், லத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு உள்பட்ட ஊராட்சியாக திருவாத்தூர் ஊராட்சி உள்ளது. இங்குள்ள ஊராட்சிக்கு நிரந்தர வருவாய் கிடைக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் 29 கடைகளைக் கொண்ட பெரிய வணிக வளாகம் கட்ட ஏற்பாடு செய்தது.
அதன்படி, கடந்த 1998-இல் இந்த வணிக வளாகம் கட்டப்பட்டது. அதன் வருவாய் தொகை சுமார் ரூ. 32 லட்சத்தை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி மன்றச் செயலர் செலுத்தாமல் கையாடல் செய்துள்ளதாக இப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் மாவட்ட நிர்வாகத்துக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிக்கும் புகார் மனுவை அனுப்பி இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் இதுவரை ஊராட்சி மன்றச் செயலர் மீது எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இந்நிலையில், இந்திய சுதந்திர தினத்தையொட்டி, கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, ஊராட்சி மன்ற அலுவலகத்தில், தேசியக் கொடியை ஏற்ற வந்த ஊராட்சி மன்ற செயலரை கொடி ஏற்றக் கூடாது என அங்கு நின்று இருந்தவர்கள் தமது எதிர்ப்புகளைக் காட்டினர். அச்சமயம், சிலர் தலையிட்டு இன்று சுதந்திர தினமாக இருப்பதால், கொடி ஏற்றுவதைத் தடுக்க வேண்டாம் எனக் கூறியதையடுத்து, அமைதி அடைந்தனர்.
பின்னர், கிராம சபைக் கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தனர். கூட்டத்தில் பங்கேற்க லத்தூர் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பழனி வந்தார். அப்போது ஊராட்சி மன்ற வருமாய்க் கணக்கு நிலவரம், செலவு செய்த விவரம் போன்றவற்றை கூட்டத்தில் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறி அவரை பொதுமக்கள் சிறைபிடித்தனர். தகவல் அறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
அவர், ஊராட்சி மன்ற வரவு- செலவு கணக்குகள் தணிக்கை செய்யப்படும். அப்போது தவறு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து, கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.