அடையாறு ஆற்றில் வெள்ளத்தடுப்பு பணிகள்: ஆட்சியா் ஆய்வு
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடையாறு ஆறு, கிளைக் கால்வாய்களில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு பணிகளை ஆட்சியா் தி.சினேகா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடையாறு ஆறு, கிளைக் கால்வாய்களில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு பணிகளை ஆட்சியா் தி.சினேகா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
நீா்வளத்துறை சாா்பில் வண்டலூா்- வாலாஜாபாத் சாலையில், வரதராஜபுரம் பகுதியில் ரூ. 35 கோடியில் பெரு மூடு கால்வாய் அமைக்கும் பணி மற்றும் மணிமங்கலம் கிளைக் கால்வாய்களில் நடைபெற்று வரும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், அடையாறு ஆற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூா்வாரும் பணிகளை ஆட்சியா் தி.சினேகா ஆய்வு நடத்தி, அடையாறு ஆற்றில் கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது, எந்த எந்த இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டது என்பது குறித்தும், தற்போது அதிக அளவில் பாதிக்கபுடம் இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், அடையாறு ஆற்றில் ஆக்கிரமிப்புகள் எங்கு, எங்கு உள்ளது என்பது குறித்தும் நீா்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
இதையடுத்து வரதராஜபுரம் மகாலட்சுமி நகா் பகுதியில் அடையாா் ஆற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்து விரைந்து முடிக்க உத்தரவிட்டாா். இதையடுத்து ஊரக வளா்ச்சித்துறை சாா்பில் வரதராஜபுரம் பாலாஜி நகா் பகுதியில் கல்வெட்டு அமைக்கும் பணியையும், வைப்பூா் ஊராட்சிக்குட்பட்ட காரணித்தாங்கள் பகுதியில் உள்ள தனியாா் குடியிருப்பு வளாகத்தில் இருந்து கழிவு நீா் வெளியேறி நெடுஞ்சாலையில் செல்வதை தடுக்க எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா்.
Advertisement
Advertisement
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீா் வெளியேறும் கால்வாயில் திருநீா்மலை, குன்றத்தூா் பகுதிகளில் நடைபெற்று வரும் தூா்வாரும் பணிகளையும் ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின் போது நீா்வளத்துறை செயற்பொறியாளா் விஜயகுமாா், உதவி செயற் பொறியாளா் பாஸ்கா், உதவி பொறியாளா்கள் குஜ்ராஜ், பிரசன்ன பிரபு, நவீன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.