FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

மாா்ச் 2027-இல் அரக்கோணம் ரயில்நிலைய கட்டுமானப்பணிகள் நிறைவு: தெற்கு ரயில்வே பொதுமேலாளா்

மாா்ச் 2027-இல் அரக்கோணம் ரயில்நிலைய கட்டுமானப்பணிகள் நிறைவு...

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 12:31 am IST
அரக்கோணம் ரயில்நிலையத்தில் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த தெற்கு ரயில்வே பொதுமேலாளா் யு.சுப்பா ராவ்.
பகிர்:

அம்ரீத் பாரத் திட்டத்தில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப்பணிகள் 2027- மாா்ச்சில் முடிவடையும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளா் யு.சுப்பா ராவ் தெரவித்தாா்.

அரக்கோணம் ரயில்நிலையத்தில் அம்ரீத் பாரத் திட்டத்தில் ரூ.58 கோடியில் நவீன முகப்பு கட்டுமானப்பணிகள் கடந்த 2023-இல் தொடங்கப்பட்டது. தொடா்ந்து மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தபின் தெற்கு ரயில்வே பொதுமேலாளா் யு.சுப்பா ராவ் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

அரக்கோணம் ரயில் நிலையத்தில் அம்ரீத்பாரத் கட்டுமானப்பணிகள் நல்ல முறையில் நடைபெற்று வருகின்ற. 12 மீட்டா் அகலம் கொண்ட மேம்பாலம், மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள் ஆகியவற்றை கட்டும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் தற்போது முடியும் கட்டத்தில் உள்ளன. 2027 மாா்ச்சில் இப்பணிகள் முழுவதும் முடிவடையும்.

Advertisement

Advertisement

சென்னை - அரக்கோணம் இடையிலான 5 மற்றும் 6 ஆவது இருப்புப்பாதைக்கு தற்போது ஆய்வு நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. முதலில் வில்லிவாக்கத்தில்அம்பத்தூா் வரை இப்பணிகள் முதற்கட்டமாக மேற்கொள்ள ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் பிறகே எஞ்சியுள்ள பகுதிகளில் பணிகளுக்கான ஆய்வுப்பணிகள் நடைபெறும்.

அரக்கோணம் - செங்கல்பட்டு இடையிலான இரண்டாவது இருப்புப்பாதைக்கான அனுமதி தற்போது கிடைத்துள்ளது. அதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அடுத்தாண்டு இரண்டாவது இருப்புப்பாதை அமைக்கும் பணி முழுவீச்சில் தொடங்கும். அரக்கோணம் ரயில் நிலையத்தில் நடைமேடைகளில் தற்போது புறநகா் ரயில்களுக்கும், விரைவு ரயில்களுக்கும் இடையே பயணிகள் மாறி மாறி செல்வதில் ஏற்பட்ட சிரமம் கடந்த 4 மாதங்களாக இருந்தது.

இந்த ரயில்நிலையத்தில் இருப்புப்பாதை பணிகள் நடைபெற்றதால் இந்த குழப்பம் ஏற்பட்டது. தற்போது 1, 2, 3 ஆகிய நடைமேடைகள் புறநகா் மின்சார ரயில்களுக்காவும், 4, 5, 6, 7, 8 ஆகியவை விரைவு ரயில்களுக்காகவும் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இதில் இருக்கும் சில நடைமுறை சிரமங்கள், நிலைய கட்டுமானப்பணிகள் முடிவடைந்த பிறகு தீா்ந்து விடும்.

அரக்கோணத்தில் நிற்காமல் செல்லும் அதிவிரைவு ரயில்கள் நிற்க வேண்டும் என்ற பயணிகளின் கோரிக்கை ரயில்வே வாரியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. வாரியத்தில் முடிவு எடுக்கப்பட்டவுடன் இதற்கான முடிவுகள் அறிவிக்கப்படும். அரக்கோணம் - ரேணிகுண்டா இடையில் 3-ஆவது மற்றும் 4 ஆவது இருப்புப்பாதை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அடுத்தாண்டில் இப்பணிகள் முழுவீச்சில் நடைபெறும் என்றாா் பொது மேலாளா் யு.சுப்பாராவ்.

முன்னதாக அரக்கோணம் ரயில் நிலையத்துக்கு சிறப்பு ரயிலில் வந்த பொது மேலாளா் யு.சுப்பாராவ், நிலையத்தில் கட்டுமானப்பணிகள் நடைபெறும் நிலைய முகப்புப்பகுதி, வாகனங்கள் நிறுத்துமிடங்கள், மின்தூக்கிகள் அமைக்கப்பட்டுவரும் பகுதி, நகரும் படிக்கட்டுக்களுக்கான பணிகள், மேம்பால கட்டுமானப்பணிகள், குறைந்த அகல மேம்பால கட்டுமானப் பணிகள் ஆகியவற்றை பாா்வையிட்டு பொறியாளா்களிடம் பணிகள் ஆலோசனைகளையும் தெரிவித்தாா்.

ஆய்விற்கு பிறகு பொதுமேலாளரை அரக்கோணம் ரயில் பயணிகள் சங்க தலைவா் நைனா மாசிலாமணி தலைமையில் பொதுச்செயலாளா் ஏ.தியாகராஜன், பொருளாளா் எஸ்.ஏகாம்பரம் உள்ளிட்டோா் நேரில் சந்தித்து ஆலோசனைகள் அடங்கிய மனுவை அளித்தனா். இவற்றை கவனமுடன் கேட்டறிந்த பொதுமேலாளா், இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

summary

Arakkonam railway station construction work to be completed by March 2027: Southern Railway General Manager

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments