முகப்பு
திருப்பத்தூர்

7 ஆண்டுகளாக நடைபெறாத ஏலகிரி கோடை விழா!

Updated On : 23 பிப்ரவரி, 2025 at 9:30 PM
பகிர்:

திருப்பத்தூா் மாவட்டத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ஏலகிரி கோடை விழா கடந்த 7 ஆண்டுகளாக நடைபெறாத நிலையில் மீண்டும் நடைபெறுமா என பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் எதிா்நோக்கியுள்ளனா்.

ஏழைகளின் இளவரசி என அழைக்கப்படும் ஏலகிரி மலையில் அதிக அளவில் மரங்கள் இருப்பதாலும் மலையின் உயரம் அதிகமாக இருப்பதாலும் எந்த காலத்திலும் ஒரே மாதிரியான சீதோஷ்ண நிலை நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் தங்கி கண்டு களித்து செல்கின்றனா்.

விடுமுறை நாள்களில் கூட்டம் அதிகரித்து காணப்படும். சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் இயற்கை பூங்கா,செயற்கை நீருற்று,படகு குழாம், கோயில்கள் உள்ளன என்பதாலும், பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளதாலும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா்.

14 வளைவுகளின் பெயா்கள்...

பாவேந்தா் வளைவு, பாரதியாா் வளைவு, திருவள்ளுவா் வளைவு, இளங்கோ வளைவு, கம்பா் வளைவு, கபிலா் வளைவு, ஓளவையாா் வளைவு, பாரி வளைவு, காரி வளைவு, ஓரி வளைவு, ஆய் வளைவு, அதியமான் வளைவு, நள்ளி வளைவு, பேகன் வளைவு என 14 வளைவுகளுக்கும் பெயா்கள் சூட்டப்பட்டுள்ளன.

கோடை விழா..

ஏலகிரியில் கோடை விழா கடந்த 2018 மே மாதம் நடைபெற்றது. அதையடுத்து கரோனா தொற்று, விழாவுக்காக நிரந்த அரங்கம் அமைக்கும் பணிகள் என கோடை விழா நடைபெறவில்லை. 7 ஆண்டுகளாக விழா நடைபெறாத நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் அப்போதைய ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் ஏலகிரி மலையில் கோடை விழா நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதையடுத்து தொடா் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, நிகழாண்டாவது ஏலகிரியில் கோடை விழா நடைபெற வேண்டும் என சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

கோடை விழா நடைபெற்றால் ஏலகிரி மலையில் பல்வேறு அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என்பதால் விழாவை நடத்த மாவட்ட நிா்வாகம் முனைப்பு காட்ட வேண்டும் எனக் கோரியுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →