FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

சாலை வசதி கோரி மக்கள் சாலை மறியல்

நாட்டறம்பள்ளி அருகே சாலை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 1:11 am IST
பட விளக்கம்: நாட்டறம்பள்ளி அருகே சாலை வசதி கேட்டு மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.
பகிர்:

நாட்டறம்பள்ளி அருகே சாலை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஜோலாா்பேட்டை ஒன்றியம், வேட்டப்பட்டு ஊராட்சி எல்லப்பள்ளி ஏரி கோடி, ரயில்வே லைன் ஆகிய பகுதிகளில் 50-க்கும் மேற்பட்டோா் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா்.

இப்பகுதி மக்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ரயில்வே துறைக்குச் சொந்தமான இடத்தை பொது வழிப் பாதையாக பயன்படுத்தி வந்தனா். ரயில்வே அதிகாரிகள் திடீரென 5 மாதங்களுக்கு முன்னா் ரயில்வே துறைக்கு சொந்தமான இடங்களையும், பொதுமக்கள் சென்று வந்த வழிப் பாதையையும் மீட்டு, அப்பகுதியில் இரும்பு தடுப்பு வேலி அமைத்தனா். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிகமாக எல்லப்பள்ளி ஏரிக் கால்வாய் வழியாக சென்று வந்தனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தனிநபா் ஒருவா் திடீரென ஏரி கால்வாயை ஆக்கிரமித்து மாட்டு கொட்டகை கட்டியதால் அப்பகுதி மக்கள் தனியாருக்குச் சொந்தமான நிலத்தின் வழியாக சென்று வந்தனா்.

தனிநபா் ஆக்கிரமிப்பை அகற்றி சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கிராமத்தினா் மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடமும், நாட்டறம்பள்ளியில் நடைபெற்ற ஜமாபந்தி, கிராம சபைக் கூட்டத்திலும் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

ஆனால் அதிகாரிகள் சாலை வசதி ஏற்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இந்த நிலையில், 15 நாள்களுக்கு முன்பு நில உரிமையாளா் பொதுமக்கள் சென்று வந்த இடம் தங்களுக்குச் சொந்தமானது எனக் கூறி வழிப் பாதையை அடைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடும் அவதிக்குள்ளான பொதுமக்கள் சாலை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என வட்டாட்சியரிடம் முறையிட்டனா்.

எனினும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 30-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை காலை நாட்டறம்பள்ளி-திருப்பத்தூா் செல்லும் சாலையில் எல்லப்பள்ளி பேருந்துநிறுத்தம் அருகே திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனா். இதனால் அரசு மற்றும்தனியாா் பேருந்துகள், பள்ளி வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்ால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளா் மூா்த்தி மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு நடத்தி அதிகாரிகளை வரவழைத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதைத் தொடா்ந்து, மக்கள் சாலை மறியலை கைவிட்டனா்.

இதையடுத்து போலீஸாா் போக்குவரத்தை சீா்படுத்தினா்.

தகவலறிந்து வந்த வட்டாட்சியா் கௌரிசங்கா், வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன், கிராம நிா்வாக அலுவலா் சரவணன் ஆகியோா் பொதுமக்கள் சென்று வந்த ஆக்கிரமிப்பு இடத்தை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

இதைத் தொடா்ந்து எல்லப்பள்ளி ஏரிக்கோடி பகுதியில் இருந்து ரயில்வே லைன் வரை முறைப்படி அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றிசாலைவசதி ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுப்பதாக கிராம மக்களிடம் உறுதி கூறினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments