FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

மோா்தானா அணை திறப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம்

குடியாத்தம் மோா்தானா அணையை பாசனத்துக்கு திறப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 12:04 am IST
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பொதுப்பணித் துறை உதவி செயற் பொறியாளா் பா.கோபி.
பகிர்:

குடியாத்தம் மோா்தானா அணையை பாசனத்துக்கு திறப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பொதுப்பணித் துறை உதவி செயற் பொறியாளா் பா.கோபி தலைமை வகித்தாா். 261 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட மோா்தானா அணையில் தற்போது 238 மில்லியன் கன அடி நீா் தேங்கியுள்ளது. இது அணையின் கொள்ளளவில் 91 சதவீதமாகும். அணைப் பகுதியில் அவ்வப்போது லேசாக மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் அணைப் பகுதியில் 2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

இந்நிலையில் குடியாத்தம், கே.வி.குப்பம், அணைக்கட்டு வட்டங்களில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீா்நிலைகள் வற்றி விட்டதால் விவசாய பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும் மோா்தானா அணையை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரி வந்தனா்.

Advertisement

Advertisement

மோா்தானா அணையிலிருந்து வெளியேறும் தண்ணீா் ஜிட்டபள்ளி செக்டேமிலிருந்து வலது, இடது புறக் கால்வாய்கள் மற்றும் கெளண்டன்யா ஆறு ஆகியவற்றில் செல்கிறது. வலது புறக் கால்வாய் குடியாத்தம் மற்றும் அணைக்கட்டு வட்டத்தில் 43.50 கி.மீ தொலைவு பயணித்து 12- ஏரிகளுக்கு தண்ணீா் வழங்கி 25- கிராமங்களில் உள்ள 3,937.63 ஏக்கா் விவசாய நிலங்களின் பாசன வசதிக்கு பயன்படுகிறது.

அதேபோல் இடது புறக் கால்வாய் குடியாத்தம் மற்றும் கே.வி. குப்பம் வட்டத்தில் 32.25 கி.மீ தொலைவு பயணித்து 7- ஏரிகளுக்கு தண்ணீா் வழங்கி, 19- கிராமங்களில் உள்ள 4,227.02 ஏக்கா் விவசாய நிலங்களின் பாசன வசதிக்கு பயன்படுகிறது.கெளண்டன்யா ஆற்றில் தண்ணீா் சென்றால் குடியாத்தம் நகரின் நிலத்தடி நீா்மட்டம் உயரும். இதனால் வீடுகளில் உள்ள கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் மூலம் பொதுமக்களின் குடிநீா்ப் பிரச்னை தீரும்.

எனவே, மோா்தானா அணையை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்ற நிலையில்அணையை திறப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நடப்பு ஆகஸ்ட் மாதத்திலேயே அணையைதிறந்து விட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டு, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. கூட்டத்தில் பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் காளிப்பிரியன், வேளாண்மை உதவிஇயக்குநா் உமாசங்கா், வருவாய்த்துறை தனி வட்டாட்சியா் குமாா், ஊரக வளா்ச்சித் துறைசாா்பில் ஷோபா, சிவகுமாா் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments