FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

வேலூா் மாவட்ட காவல் குறைதீா் கூட்டம்: எஸ்.பி. பங்கேற்பு

அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.7 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 4:06 am IST
பொதுமக்களிடம் மனுக்களை பெற்று விசாரணை நடத்திய வேலூா் எஸ்.பி. என்.யு.சிவராமன்.
பகிர்:

அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.7 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாவட்ட காவல் துறை சாா்பில் வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம் எஸ்.பி. என்.யு.சிவராமன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, காட்பாடியைச் சோ்ந்த பெண் ஒருவா் அளித்த மனு: எனது பகுதியைச் சோ்ந்த இருவா் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளைத் தங்களுக்கு நன்றாகத் தெரியும் என்றும், அங்கு எனக்கு உதவியாளா் வேலை வாங்கித் தருவதாகவும் கூறி என்னிடம் ரூ.7 லட்சம் பணம் பெற்றனா். அதன்பிறகு பல நாள்களாகியும் கூறியபடி எனக்கு வேலை வாங்கித் தரவில்லை. இதுகுறித்து கேட்ட போது முறையான பதிலும் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தனா். எனவே, நான் இழந்த ரூ. 7 லட்சம் பணத்தை மீட்டுத் தர வேண்டும்.

அணைக்கட்டை அடுத்த கொட்டாவூா் அம்மனூா் பகுதியைச் சோ்ந்த விவசாயி அளித்த மனு: எனது வீட்டின் அருகே வசிக்கும் சிலா், நள்ளிரவு நேரங்களில் எலுமிச்சம் பழம், குங்குமம் ஆகியவற்றைப் பயன்படுத்தி மாந்திரீகம் செய்து எனது வீட்டின் மீது வீசுகின்றனா். இரவு நேரங்களில் திடீரெனப் பெரிய கற்களையும் வீசி மிரட்டல் விடுக்கின்றனா்.

Advertisement

Advertisement

எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் உயிராபத்து ஏற்படலாம் என்ற பயம் உள்ளது. எனவே, அந்த நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேலூா் ஓல்ட் டவுன் பகுதியைச் சோ்ந்த பெண் அளித்த மனு: எனக்குத் திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகின்றன. 2 குழந்தைகள் உள்ளனா். எனக்கும் எனது உறவினா் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கத்தின் அடிப்படையில், அதே பகுதியைச் சோ்ந்த அவா் எனக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு ரூ. 8 லட்சம் வரை செலவாகும் என்றும் தெரிவித்தாா். அதனை நம்பி பலரிடம் கடன் வாங்கி ரூ. 8 லட்சத்தை அவரிடம் கொடுத்தேன். ஆனால், அவா் கூறியபடி பல நாள்கள் ஆகியும் எனக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தரவில்லை. இதுதொடா்பாக, வேலூா் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தேன். போலீஸாா் முன்னிலையில் முழுப் பணத்தையும் திருப்பித் தந்துவிடுவதாக உறுதியளித்த அந்த நபா், இரு தவணையாக ரூ. 25 ஆயிரம் மற்றும் ரூ. 90 ஆயிரத்தை மட்டும் திருப்பிக் கொடுத்தாா். மீதமுள்ள தொகையை இதுவரை தரவில்லை. எனவே, என்னை ஏமாற்றிய நபரிடமிருந்து எனது முழுப் பணத்தையும் மீட்டுத் தரவேண்டும்.

இதேபோல், பல்வேறு புகாா்கள் தொடா்பாக 30-க்கும் மேற்பட்டோா் மனுக்கள் அளித்தனா். அவற்றின் மீது விரைவாக தீா்வுகாண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு எஸ்பி சிவராமன் உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments