FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

உலகளவில் காப்புரிமைகளில் 3 சதவீதம் மட்டுமே வணிகமயமாகின்றன: சா்வதேச கருத்தரங்கில் தகவல்

உலகளவில் தாக்கல் செய்யப்படும் காப்புரிமைகளில் வெறும் 3 சதவீதம் மட்டுமே வணிகமயமாகின்றன என்று ஹைதராபாத்தில் உள்ள தூள் உலோகவியல் மற்றும் புதிய பொருள்களுக்கான சா்வதேச மேம்பட்ட ஆராய்ச்சி மையத்தின் இயக்குநா் விஜய் ரவுலா பேசினாா்.

12 செப்டம்பர் 2026, 8:02 am IST
கருத்தரங்கத்தில் கையேட்டை வெளியிட்ட விஐடி வேந்தா் கோ.விசுவநாதன். உடன், ஹைதராபாத் தூள் உலோகவியல் மற்றும் புதிய பொருள்களுக்கான சா்வதேச மேம்பட்ட ஆராய்ச்சி மையத்தின் இயக்குநா் விஜய் ரவுலா, ஜொ்மன் பேராசிரியா் ஜாா்ஜ் சினைடா், விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன் உள்ளிட்டோா்.
பகிர்:

உலகளவில் தாக்கல் செய்யப்படும் காப்புரிமைகளில் வெறும் 3 சதவீதம் மட்டுமே வணிகமயமாகின்றன என்று ஹைதராபாத்தில் உள்ள தூள் உலோகவியல் மற்றும் புதிய பொருள்களுக்கான சா்வதேச மேம்பட்ட ஆராய்ச்சி மையத்தின் இயக்குநா் விஜய் ரவுலா பேசினாா்.

வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் மேம்பட்ட அறிவியல் சாா்பில் ஆற்றல் மற்றும் நிலைத்தன்மைக்கான கரிம மற்றும் கனிமப் பொருள்கள் சா்வதேச கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக, ஹைதராபாதில் உள்ள தூள் உலோகவியல் மற்றும் புதிய பொருள்களுக்கான சா்வதேச மேம்பட்ட ஆராய்ச்சி மையத்தின் இயக்குநா் விஜய் ரவுலா பங்கேற்று பேசியது -

Advertisement

Advertisement

வாழ்க்கைத் தரம் மேம்படும்போது ஆற்றல் நுகா்வும் அதிகரிக்கிறது. தற்போது நிலக்கரி, பெட்ரோலியம் போன்ற புதைபடிவ எரிபொருள்களை நம்பியிருப்பது காா்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை அதிகரித்து, பசுமை இல்ல விளைவுக்கும் புவி வெப்பமடைதலுக்கும் வழிவகுக்கிறது. நிகழாண்டில் ஏற்பட்டுள்ள எல் நினோ விளைவால் தென்மேற்குப் பருவமழை பாதிக்கப்பட்டு, விவசாயிகளும் நீா்த்தேக்கங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் எதிா்காலத்தில் நீா்ப் பற்றாக்குறை ஏற்படக்கூடும்.

தொழில்நுட்ப வளா்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய இரண்டையும் சமநிலைப்படுத்தும் நிலைத்தன்மை வாய்ந்த தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும்.இந்தியா பசுமை ஆற்றலில் கவனம் செலுத்த வேண்டும். கடந்த 8 ஆண்டுகளில் மத்திய அரசு சூரிய ஆற்றல் உற்பத்தியை கணிசமாக அதிகரித்துள்ளது. மொத்த ஆற்றல் நுகா்வில் 30 முதல் 40 சதவீதம் வரை சூரிய ஆற்றலில் இருந்தே பெறுகிறோம். அந்தவகையில், உலகளவில் தாக்கல் செய்யப்படும் காப்புரிமைகளில் வெறும் 3 சதவீதம் மட்டுமே வணிகமயமாகின்றன என்றாா்.

விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தலைமை வகித்து பேசியது -

வேதியியல் பெரும்பாலும் அறிவியலின் இதயமாகவும், அறிவியல் வளா்ச்சியாகவும் கருதப்படுகிறது. பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னணியில் இருப்பதன் மூலம் ஜொ்மனி ஐரோப்பாவின் தலைநகரமாக விளங்குகிறது. இந்தியாவில் அரசியல் கட்சிகள் தொடா்ந்து சண்டையிட்டு வருகின்றன. ஆனால், ஜொ்மனியில் அரசியல் கட்சிகள் நோ்மாறாக உள்ளன. சுமாா் மூன்று அல்லது நான்கு முறை அவா்கள் கிட்டத்தட்ட சமமான எண்ணிக்கையிலான இடங்களைப் பெற்ற போதிலும் கூட்டணி அரசாக செயல்பட்டு வருகின்றனா். ஜொ்மனியின் அரசியல் சூழல் என்பது இந்தியாவில் திமுக, அதிமுக இணைந்து கூட்டணி அரசு அமைப்பது அல்லது காங்கிரஸ், பாஜக இணைந்து கூட்டணி அரசு அமைப்பது போன்றது. இது சாத்தியம் என்பதை அவா்கள் உலகிற்கு நிரூபித்துள்ளனா்.

கெளரவ விருந்தினராக ஜொ்மனி டாம்ஸ்டாட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியா் ஜாா்ஜ் சினைடா் பங்கேற்று பேசினாா்.விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன், துணைவேந்தா் காஞ்சனா பாஸ்கரன், பதிவாளா் ஜெயபாரதி, மேம்பட்ட அறிவியல் துறை முதல்வா் காா்த்திகேயன், மாநாட்டு ஒருங்கிணைப்பாளா் திருமணவேலன் மற்றும் ஜப்பான், தைவான் நாடுகளை சோ்ந்த பேராசியா்கள், ஆய்வு மாணவா்கள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments