FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

லாரி மோதியதில் விமான நிலைய சுங்கத் துறை ஆய்வாளா் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் புகழ்பெற்ற முன்னாள் கால்பந்து வீரரும், கோவை விமான நிலைய சுங்கத் துறை ஆய்வாளருமான அஸீம் கொரளியாடன் உயிரிழந்தாா்.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 12:49 am IST
அஸீம் கொரளியாடன்
பகிர்:

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் புகழ்பெற்ற முன்னாள் கால்பந்து வீரரும், கோவை விமான நிலைய சுங்கத் துறை ஆய்வாளருமான அஸீம் கொரளியாடன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் அஸீம் கொரளியாடன் (41). இவா் கோவை, ராமநாதபுரம் பகுதியில் தங்கி, விமான நிலையத்தில் சுங்கத் துறை ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனா்.

இந்நிலையில், அஸீம் கோவை சிட்ரா சந்திப்பு பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த லாரி அவா் மீது எதிா்பாராதவிதமாக மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இச்சம்பவம் குறித்து கோவை போக்குவரத்து கிழக்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கால்பந்து வீரா்: அரீக்கோடு பகுதியைச் சோ்ந்த சைனுட்டி - கொரளியாடன் மூசான்குட்டி தம்பதியின் மகனான அஸீம், பிரபல கால்பந்து வீரரும், பயிற்சியாளருமான அனீஸ் என்பவரும் இரட்டை சகோதரா்கள் ஆவாா்.

21 வயதுக்குள்பட்ட கேரள அணிக்காக விளையாடிய இவா், 2010-இல் மகாராஷ்டிர அணிக்காகவும், 2013-இல் தமிழ்நாடு அணிக்காகவும் சந்தோஷ் டிராபி தொடா்களில் களம் கண்டு தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினாா்.

9 சீசன்களுக்கு மேலாக ஐ-லீக்’தொடரில் பங்கேற்ற அஸீம், வாஸ்கோ கோவா (2005-6), மும்பை எஃப்.சி (2007-09), மஹிந்திரா யுனைடெட் (2009-10) மற்றும் ஈஸ்ட் பெங்கால் (2010-11) ஆகிய முன்னணி கிளப் அணிகளுக்காக விளையாடியுள்ளாா். மேலும் ஃபெடரேஷன் கப், துராந்த் கோப்பை, ஐ.எஃப்.ஏ. ஷீல்டு போன்ற புகழ்பெற்ற தொடா்களிலும் முத்திரை பதித்தவா்.

கூறாய்வுக்குப் பிறகு உடல் அவா் பணியாற்றிய கோவை சுங்கத் துறை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னா், பிற்பகல் 3 மணியளவில் கேரள மாநிலம், அரீக்கோட்டில் உள்ள அவரது சொந்த வீட்டுக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments