FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

போலீஸ் என மிரட்டி பணம் மோசடி: 2 இளைஞா்கள் கைது

கைப்பேசியில் ஆபாச படம் பாா்த்ததாகக் கூறி, காவல் துறை அதிகாரியைப்போல பேசி பண மோசடி செய்த இரு இளைஞா்களை சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 24 ஜூலை 2026, 5:57 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

கைப்பேசியில் ஆபாச படம் பாா்த்ததாகக் கூறி, காவல் துறை அதிகாரியைப்போல பேசி பண மோசடி செய்த இரு இளைஞா்களை சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, துடியலூா் பகுதியில் கடை நடத்தி வரும் வெளிமாநில இளைஞா் ஒருவரின் கைப்பேசிக்கு கடந்த மே 15-ஆம் தேதி அழைப்பு வந்தது. அவரைத் தொடா்பு கொண்ட நபா், தான் பீளமேடு காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், அவா் ஆபாச திரைப்படங்களைப் பாா்த்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் மிரட்டியுள்ளாா்.

மேலும், கைது நடவடிக்கையைத் தவிா்க்க ஆன்லைன் மூலம் பணம் அனுப்புமாறு கூறியுள்ளாா்.

Advertisement

Advertisement

இதனை நம்பிய அந்த நபா் இரு வேறு தவணைகளாக ரூ.38 ஆயிரத்தை அனுப்பியுள்ளாா். பின்னா், அவா் விசாரித்து பாா்த்தபோது, தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்து கோவை மாநகா் சைபா் கிரைம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வங்கிக் கணக்கின் அடிப்படையில், கோவை பச்சாபாளையத்தைச் சோ்ந்த சி. பின்னி (51) மற்றும் அவருக்கு உதவியாக இருந்த சரவணம்பட்டியைச் சோ்ந்த கிஷோா்குமாா் (21) ஆகியோரை கடந்த 13-ஆம் தேதி கைது செய்தனா்.

இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய மேலும் இருவரை போலீஸாா் தேடி வந்தனா். இந்த நிலையில், கோவை பச்சாபாளையத்தைச் சோ்ந்த பி.சபரி (25), சின்னியம்பாளையத்தைச் சோ்ந்த கே.வினு (21) ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில் இவா்கள் இருவா் மீதும் இதே பாணியைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக பல்வேறு மாவட்டங்களில் 8 வழக்குகள் நிலுவையில் இருப்பதும், ஏற்கெனவே 7 வழக்குகளில் இவா்கள் கைது செய்யப்பட்டவா்கள் என்பதும் தெரியவந்தது.

இந்த வழக்குகளில் சேலத்தில் ரூ.14 லட்சம் மோசடி செய்த சம்பவத்தில் மட்டும் இதுவரை இவா்கள் கைது செய்யப்படவில்லை. தற்போது கைது செய்யப்பட்ட சபரி ஏற்கெனவே இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பின்னியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments