அந்தியூர் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் மறியல் போராட்டம்
அந்தியூர் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பவானி: அந்தியூர் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், கெட்டிசமுத்திரம் ஊராட்சி, கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் அந்தியூர் பர்கூர் சாலையில் கிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே அமர்ந்து திங்கள்கிழமை காலை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement
இதனால், அப்பகுதியில் வாகன போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலின்பேரில் அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பவ இடத்துக்கு சென்ற அந்தியூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார். கோடை காலத்தில் பொது மக்களுக்கு தேவையான குடிநீரை முறையாக வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதையடுத்து குடிநீர் பிரச்னை விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.