FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆண்டவன் உத்தரவு: சிவன்மலை முருகன் கோயிலில் போகர் சித்தர் படம் வைத்துப் பூஜை

காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஸ்ரீ போகர் சித்தரின் திருவுருவப் படத்தை வைத்து வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

1 பிப்ரவரி 2024, 2:21 pm IST
காங்கயம் அருகே, சிவன்மலை முருகன் கோயிலில், கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும் போகர் சித்தரின் படம்.
பகிர்:

காங்கயம்: காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஸ்ரீ போகர் சித்தரின் திருவுருவப் படத்தை வைத்து வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலையில் புகழ்பெற்ற சுப்பிரமணியசுவாமி மலைக் கோயில் உள்ளது. மற்ற எந்தக் கோயிலிலும் இல்லாத ஒரு சிறப்பு அம்சமாக, சிவன்மலை முருகன் கோயிலில் ஆண்டவன் உத்தரவு என்ற பெயரில், ஏதாவது ஒரு பொருளை வைத்து சிறப்புப் பூஜை செய்யப்படுவது வழக்கம். பின்னர் அந்தப் பொருளை கோயில் மூலவர் அறைக்கு முன்பாக, கற்தூணில் உள்ள கண்ணாடிப் பேழைக்குள் வைத்து பக்தர்களின் பார்வைக்கு வைப்பார்கள்.

இந்தக் கண்ணாடிப் பெட்டிக்குள் என்ன பொருளை வைக்க வேண்டும் என்ற தேர்வு முறை சற்று வித்தியாசமானது. சிவன்மலை முருகன் ஏதாவது ஒரு பக்தரின் கனவில் வந்து, இன்ன பொருளை வைத்துப் பூஜை செய்ய உத்தரவிடுவதாகக்  கூறப்படுகிறது. இதனால் தான், இது ஆண்டவன் உத்தரவு  என்று அழைக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

இப்படி, கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் என்று எதுவும் இல்லாமல், இன்னொரு பக்தரின் கனவில் வந்து, அடுத்த பொருளை சுட்டிக் காட்டும் வரையில், பழைய பொருளே கண்ணாடிப் பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு, கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்படும் பொருள், தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் என்பது இப் பகுதிகளில் உள்ள பக்தர்களின் நம்பிக்கை. இந்தப் பொருள் தேசிய அளவில் ஏற்றமும் பெறலாம், இறங்குமுகமும் பெறலாம் என்பதற்கான குறியீடாக, இந்தக் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும் பொருளை இப்பகுதி மக்கள் கவனித்து வருகின்றனர்.

கடைசியாக கடந்த மார்ச் 21 ஆம் தேதி இலவம் பஞ்சு, பருத்தி பஞ்சு மற்றும் சோழி உள்ளிட்ட பொருள்கள் வைத்து பூஜை செய்யப்பட்டு, அந்தப் பொருள்கள் வியாழக்கிழமை வரை கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடலூர் பகுதியைச் சேர்ந்த பொன்.கபில்தேவ் என்ற பக்தரின் கனவில் வந்ததாக, வெள்ளிக்கிழமை ஸ்ரீ போகர் சித்தரின் உருவப் படத்தை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர், கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த பஞ்சுப் பொருள்கள் நீக்கப்பட்டு, தற்போது மேற்கண்ட போகர் சித்தரின் படம் பக்தர்களின் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments