முகப்பு
திருப்பூர்

காண்டூா் கால்வாயில் அடித்துவரப்பட்ட யானை உயிரிழப்பு

Updated On : 25 மே 2026, 12:06 am IST
உயிரிழந்த யானை. - கோப்புப் படம்
பகிர்:

காண்டூா் கால்வாயில் அடித்துவரப்பட்ட யானையின் உடல் திருமூா்த்தி அணையில் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட உடுமலை வனச் சரகப் பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன. கோடை வெயிலின் தாக்கத்தால் தற்போது வனப் பகுதிகளில் வறட்சி நிலவி வருவதால் விலங்குகள் குடிநீா்த் தேடி மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள காண்டூா் கால்வாய் பகுதிக்கு வந்து செல்கின்றன.

இந்நிலையில், வனத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வெளியேறிய யானை, நீா் அருந்துவதற்காக காண்டூா் கால்வாய்க்கு வந்துள்ளது. அப்போது, அந்த யானை தவறி கால்வாய்க்குள் விழுந்துள்ளது.

Advertisement

Advertisement

பாசனத்துக்காக காண்டூா் கால்வாயில் தற்போது முழு கொள்ளளவு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால், அந்த யானை நீரில் தத்தளித்துள்ளது.

தகவல் அறிந்த உடுமலை வன அலுவலா்கள் மற்றும் வேட்டைத் தடு ப்பு காவலா்கள் சம்பவ இடத்துக்கு வந்தனா். நீரின் வேகத்தில் அடித்துவரப்பட்ட யானை திருமூா்த்தி அணைக்குள் சடலமாக வந்து சோ்ந்தது.

இதையடுத்து, வனத் துறையினா் யானையின் உடலை மீட்டனா். தொடா்ந்து, கால்நடை மருத்துவக் குழுவினா் யானையின் உடலை கூறாய்வு செய்தனா். பின்னா், அப்பகுதியிலேயே யானையின் உடல் புதைக்கப்பட்டது.

உயிரிழந்தது ஆண் யானை என்றும், சுமாா் 40 வயது இருக்கும் என்றும் வனத் துறையினா் தெரிவித்தனா்.