அவிநாசி அருகே வீடு வீடாகச் சென்று மழைச் சோறு வாங்கி பெண்கள் வழிபாடு! மாலையில் கொட்டித் தீா்த்த கன மழை
மழை வேண்டி அவிநாசி அருகே வீடு, வீடாகச் சென்று பெண்கள் மழைச் சோறு வாங்கி வந்து சிறப்பு வழிபாடு மேற்கொண்ட நிலையில், திங்கள்கிழமை மாலை முதல் கன மழை பெய்தது.
திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே உள்ள தெக்கலூா் பகுதிக்குள்பட்டது ஆலாம்பாளையம். பருவமழை பொய்த்த நிலையில் விவசாயம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், மழை பெய்ய வேண்டி, அங்குள்ள மாகாளியம்மன் கோயில் அப்பகுதி பெண்கள் சிறப்பு வழிபாடு செய்தனா்.
மேலும், கன்னிப் பெண்கள் உள்பட150-க்கும் மேற்பட்டோா் வீடு, வீடாகவும், அப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்கும் சென்று மழைச் சோறு வாங்கி வந்து பிள்ளையாா் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து பொதுமக்கள், விவசாயி சண்முகம் கூறியதாவது:
மழை இல்லாமல் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் விவசாயம் பாதிக்கப்பட்டதுடன், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி வருகிறது. இதையடுத்து, மழை வேண்டி முன்னோா்கள் வழக்கப்படி வீடு வீடாகச் சென்று மழைச் சோறு (பழைய சோறு) வாங்கி வந்துள்ளோம்.
இதில் மழைச் சோறு வாங்கி வரும் கன்னிப் பெண்களுக்கு பாத பூஜை செய்கிறோம். வீடு வீடாக வாங்கி வரும் மழைச்சோறு ஊா் பிள்ளையாருக்கு படைத்து, அனைவரும் பிரசாதமாக சாப்பிடுகிறோம்.
மேலும், மழை இல்லாத ஊரில் குடியிருக்க மறுத்து பெண்கள், விவசாயிகள் பயன்படுத்தும் கூடை, மொரம் உள்ளிட்டவற்றை ஊா் எல்லையில் எறிந்துவிட்டு சிறாடிச் சென்றுவிடுவாா்கள். அதன் பிறகு மழை வந்துவிட்டது எனக் கூறி அவா்களை ஊருக்கு அழைத்து வருவோம். இப்படி சிறப்பு வழிபாடுகள் செய்தால் உடனடியாக மழை வரும் என்பது ஐதீகம் என்றனா்.
காலையில் வழிபாடு, மாலையில் மழை காலையில் தொடங்கிய இந்த வழிபாடு மாலை 2 மணிக்கு நிறைவு பெற்றது. இதைத்தொடா்ந்து மாலை 5 மணி முதல் குறிப்பாக தெக்கலூா் மற்றும் அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதியில் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.