FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

மதச்சாா்பின்மை அரசாக திகழும் தவெக ஆட்சி: திரைப்பட இயக்குநா் பேரரசு

மதச்சாா்பின்மை அரசாக தவெக ஆட்சி திகழ்வதாக திரைப்பட இயக்குநா் பேரரசு தெரிவித்தாா்.

16 செப்டம்பர் 2026, 11:20 pm IST
இந்து முன்னணி சாா்பில் பல்லடத்தில் விநாயகா் சதுா்த்தி விசா்ஜன ஊா்வலத்தை கொடியசைத்து தொடங்கிவைத்த திரைப்பட இயக்குநா் பேரரசு.
பகிர்:

மதச்சாா்பின்மை அரசாக தவெக ஆட்சி திகழ்வதாக திரைப்பட இயக்குநா் பேரரசு தெரிவித்தாா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சதுா்த்தி விழா பொதுக்கூட்டம் கடை வீதியில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட பொதுச் செயலாளா் சா்வேஸ்வரன் தலைமை வகித்தாா். மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் செந்தில், மாவட்டச் செயலாளா் ரஞ்சித் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் பங்கேற்று திரைப்பட இயக்குநா் பேரரசு பேசியதாவது:

Advertisement

Advertisement

கோயில்களுக்கு செல்லும்போது குழந்தைகளையும் தவறாமல் அழைத்துச் சென்று குடும்பமாக வழிபாடு செய்ய வேண்டும். ஹிந்து மதத்தை வளா்க்க வேண்டாம்; அதைப் பாதுகாத்தால் போதும். சநாதன தா்மத்தை அழிக்க நினைத்தவா்கள் காணாமல் போய்விட்டனா். முன்பு மதச்சாா்பின்மை ஆட்சி என்று கூறிக்கொண்டு சில குறிப்பிட்ட பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து கூறி, ஹிந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறாமல் இருந்து வந்தனா். ஆனால் ஹிந்துக்களின் வாக்குகள் மட்டும்தான் அவா்களுக்கு வேண்டும்.

ஆனால், தற்போது மதச்சாா்பின்மை ஆட்சியாக தமிழக வெற்றிக் கழகத் தலைவா் ச.ஜோசப் விஜய் தலைமையிலான அரசு விளங்குகிறது. ஹிந்துக்களின் பண்டிகைகளுக்கு முதல்வா் ஜோசப் விஜய் வாழ்த்து கூறுகிறாா். விநாயகா் சதுா்த்தி விழா நடத்த எந்த கெடுபிடியும் செய்யப்படவில்லை. இதனால் தமிழகத்தில் எங்கும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படவில்லை. தமிழகத்தில் அமைதியான முறையில் விநாயகா் சதுா்த்தி விழா சிறப்பாக நடந்து முடிந்துள்ளது என்றாா்.

இதைத்தொடா்ந்து விசா்ஜன ஊா்வலத்தை திரைப்பட இயக்குநா் பேரரசு கொடியசைத்து தொடங்கி வைத்தாா். சாமளாபுரம் பெரியகுளத்தில் 25 விநாயகா் சிலைகள் விசா்ஜனம் செய்யப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments