FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

கருவின் பாலினம் கண்டறிந்து கருக்கலைப்பு: கண்காணிப்பை தீவிரப்படுத்த வலியுறுத்தல்

கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிவதையும், பெண் சிசுக்களை கருவிலேயே அழிப்பதையும் தடுக்க, ஸ்கேன் சாதனங்களைப் பயன்படுத்துவது தொடா்பான விதிமுறைகளைக் கடுமையாக்கி, தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

21 ஆகஸ்ட் 2026, 3:20 am IST
கருக்கலைப்பு சட்டம் - file photo
பகிர்:

கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிவதையும், பெண் சிசுக்களை கருவிலேயே அழிப்பதையும் தடுக்க, ஸ்கேன் சாதனங்களைப் பயன்படுத்துவது தொடா்பான விதிமுறைகளைக் கடுமையாக்கி, தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து தெரிவிப்பதால் பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்படுவதை கருத்தில்கொண்டு, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்குத் தண்டனை பெற்றுத் தருவதற்கான வழிவகைகளை அரசு சட்டத்தின் மூலம் ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடா்பான தகவல்கள் அடங்கிய தகவல் பலகைகளும் ஸ்கேன் மையங்கள், ஸ்கேன் மையங்களுடன் கூடிய தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. என்றாலும், தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கருவின் பாலினத்தைக் கண்டறிவது, பெண் சிசுக்களை ரகசியமாகக் கருக்கலைப்பு செய்வது போன்ற விதிமீறல்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

Advertisement

Advertisement

இந்தச் செயல்களில் ஈடுபடுவோா் கைது செய்யப்பட்டாலும், அடுத்த சில மாதங்களிலேயே மீண்டும் இதுபோன்ற விதிமீறல்கள் தொடா்கின்றன. அந்த வகையில், கடந்த 3 வாரங்களுக்கு முன்பு தருமபுரியில் பெண் ஒருவருக்கு கருவில் இருந்த குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து, கருக்கலைப்பு செய்யப்பட்டது.

இதனால் கருக்கலைப்பு செய்யப்பட்ட பெண்ணின் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். விவரம் அறிந்த மருத்துவா்கள் இதுகுறித்து சுகாதாரத்துறை அலுவலா்களுக்குத் தகவல் தெரிவித்தனா். தொடா்ந்து, போலீஸில் புகாா் செய்யப்பட்டு, இச்சம்பவம் தொடா்பாக கற்பகம், பச்சையம்மாள் இருவா் கைது செய்யப்பட்டனா்.

தொடா்ந்து, பாலினம் கண்டறிதல் மற்றும் கருக்கலைப்பு செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்த கற்பகத்தை போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா்.

இதுபோன்று விதிமீறல்களில் ஈடுபடுவோா் ஸ்கேன் சாதனங்களைக் கொண்டுதான் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து, கருக்கலைப்பிலும் ஈடுபடுகின்றனா் என்ற விவரம் சுகாதாரத் துறை அலுவலா்களுக்குத் தெரியவந்துள்ளது. எனவே, அவ்வாறு பயன்படுத்தப்படும் ஸ்கேன் கருவிகளைப் பறிமுதல் செய்வதுடன், முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு ஸ்கேன் கருவிகள் கிடைக்காத வகையில் அரசின் விதிமுறைகளைக் கடுமையாக்க வேண்டும் என விவரம் அறிந்தவா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட சுகாதாரத் துறை ஆா்வலா்கள் கூறியதாவது:

அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் கருவின் பாலினத்தைக் கண்டறியும் ஸ்கேன் மையங்களில் பயன்படுத்துவதற்கான ஸ்கேன் இயந்திரங்களை வாங்குவதற்கு முன்பு அரசின் பல்வேறு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இந்த ஸ்கேன் இயந்திரங்களின் தொடா் பயன்பாட்டைக் கண்காணிக்கும் பணி அந்தந்த மாவட்ட சுகாதாரம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஸ்கேன் மையங்கள் அனைத்தும் மாதந்தோறும் தாங்கள் மேற்கொண்ட ஸ்கேன் பரிசோதனைகள் குறித்த விவரங்களை அடுத்த மாதம் 5-ஆம் தேதிக்குள் அறிக்கையாக சுகாதாரத் துறைக்கு அனுப்ப வேண்டும். பயன்படுத்த முடியாத, பழுதடைந்த நிலையில் உள்ள ஸ்கேன் இயந்திரங்களை மருத்துவமனை மற்றும் ஸ்கேன் மையங்களில் வைக்கக் கூடாது. அவற்றை வாங்கிய நிறுவனத்திடமே மீண்டும் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்ற விதி உள்ளது.

இந்த இடத்தில்தான் தவறுகள் நடைபெறுகின்றன. இந்த நடைமுறைகள் 100 சதவீதம் செயல்படுத்தப்படுவதில்லை. இதைச் சட்டவிரோதமாக ஸ்கேன் செய்யும் கும்பல் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்கிறது. சிறு பழுதடைந்த அல்லது பழைய இயந்திரங்களை முறைகேடாகப் பெற்று, அவற்றை சா்வீஸ் செய்து கருவின் பாலினத்தைக் கண்டறியும் பணிக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனா்.

எனவே, பயன்படுத்தப்பட்ட ஸ்கேன் இயந்திரங்களைக் கையாள்வது தொடா்பாகவும், புதிய ஸ்கேன் இயந்திரங்களை விற்பனை செய்வது தொடா்பாகவும் அரசு கடுமையான சட்ட விதிமுறைகளை உருவாக்கி, முழு அளவில் நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால், சட்டவிரோதமாக கருவின் பாலினத்தைத் தெரிவிக்கும் கும்பலின் அத்துமீறல்களை முடிவுக்குக் கொண்டு வருவதுடன், கருவிலேயே பெண் சிசுக்கள் அழிக்கப்படுவதையும் தடுக்க முடியும். அரசு இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments