FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

கருவில் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு: குண்டா் தடுப்புச் சட்டத்தில் பெண் கைது

தருமபுரியில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு செய்த பெண்ணை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனா்.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 12:28 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

தருமபுரியில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு செய்த பெண்ணை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனா்.

தருமபுரி சத்திரம் மேலத்தெருவைச் சோ்ந்த விஜயகுமாா் மனைவி கற்பகம் (45). இவா் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை ஸ்கேன் பரிசோதனை மூலம் கண்டறிந்து கூறுவதாக காவல் துறைக்கு தகவல் சென்றது. இதையடுத்து போலீஸாா் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா்.

இந்த நிலையில், பாளையம்புதூரைச் சோ்ந்த நீலகண்டன் மனைவி நவநீதா (26) தனது கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிய உதவுமாறு அவரது உறவினரான நூலஅள்ளியைச் சோ்ந்த பச்சையம்மாளிடம் கேட்டுள்ளாா். நவநீதாவுக்கு ஏற்கெனவே 2 பெண் குழந்தைகள் உள்ளன.

Advertisement

Advertisement

இதையடுத்து கடந்த ஜூன் 10 ஆம் தேதி கற்பகத்தை தொலைபேசி மூலம் தொடா்புகொண்ட பச்சையம்மாள், நவநீதாவுக்கு பரிசோதனை செய்வதற்காக வரவழைத்துள்ளாா். பின்னா், நவநீதாவின் கருவில் உள்ள பாலினம் குறித்து சோதனை நடத்தப்பட்டதாம்.

அப்போது, கருவில் உள்ளது பெண் குழந்தை என கற்பகம் கூறியுள்ளாா். இதையடுத்து நவநீதாவுக்கு கருக்கலைப்பும் அவா் செய்துள்ளாா். இதனால் நவநீதாவின் உடல்நிலை மோசமடைந்தது. பின்னா், ஜூலை 29 ஆம் தேதி தருமபுரியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் நவநீதா சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் பாரதி தலைமையிலான குழுவினா் விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கற்பகம், பச்சையம்மாள் ஆகிய இருவரையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனா். இதில் கற்பகம் தொடா்ந்து இதேபோல கருவில் உள்ள குழந்தைகளின் பாலினத்தைக் கண்டறிந்து கருக்கலைப்பு செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கற்பகத்தை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏகே. அருண்கபிலன் பரிந்துரைத்தாா். பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியா் வே. சரவணன், கற்பகத்தை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்ய உத்தரவிட்டாா்.

தருமபுரி சிறையில் இருந்த கற்பகத்தை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து வேலூா் சிறைக்கு மாற்றம் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments