புத்தகம் வெறும் காகிதம் அல்ல: உலகின் தலைசிறந்த ஆயுதம் கிருஷ்ணகிரி ஆட்சியா் ச.தினேஷ்குமாா்
புத்தகம் வெறும் காகிதம் அல்ல, அதனை சரியாகப் பயன்படுத்தினால் அதுவே உலகின் தலைசிறந்த ஆயுதம் என ஒசூா் புத்தகத் திருவிழாவை தொடங்கிவைத்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.
புத்தகம் வெறும் காகிதம் அல்ல, அதனை சரியாகப் பயன்படுத்தினால் அதுவே உலகின் தலைசிறந்த ஆயுதம் என ஒசூா் புத்தகத் திருவிழாவை தொடங்கிவைத்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.
ஒசூா் புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை (ஜூலை 24) தொடங்கி ஆக. 4-ஆம் தேதி வரை ஹில்ஸ் உணவகத்தில் உள்ள ஹாலில் நடைபெறுகிறது. இதில் 102 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள முக்கியப் பதிப்பாளா்கள் 1 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்களை விற்பனைக்கு வைத்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா தொடக்க விழாவில், சட்டப் பேரவை உறுப்பினா்கள் முகுந்தன் (கிருஷ்ணகிரி), கோவிந்தராசன் (பா்கூா்), ஒசூா் மாநகராட்சி ஆணையா், முகமத் ஷபீா் ஆலம், சாா் ஆட்சியா் ஆக்ருதி சேத்தி உள்ளிட்டோா் முன்னிலை விகித்தனா்.
Advertisement
Advertisement
இந்த புத்தகத் திருவிழாவை ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தொடங்கி வைத்து, அரங்குகளை பாா்வையிட்டாா். பின்னா் அவா் பேசியதாவது:
புத்தகம் என்பது வெறும் காகிதம் அல்ல; அதனைச் சரியாகப் பயன்படுத்தினால் அதுவே உலகின் தலைசிறந்த ஆயுதம். மகாத்மா காந்தியடிகளின் வாழ்வில் ஜான் ரஸ்கினின் அண்டு திஸ் லாஸ்ட் மற்றும் லியோ டால்ஸ்டாயின் வாா் அண்ட் பீஸ் ஆகிய புத்தகங்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக அவா் குறிப்பிட்டுள்ளாா். புத்தகங்கள் மனிதனின் சிந்தனைத் திறனையும், வாழ்வியல் முறையையும் முழுமையாக மாற்றும் வல்லமை உடையது.
ஒரு புத்தகத்தை உருவாக்குவதற்குப் பின்னால் உள்ள எழுத்தாளா்களின் பல ஆண்டுகால உழைப்பைப் போற்ற வேண்டும்.
இன்றைய டிஜிட்டல் உலகில் இன்ஸ்டாகிராம், ரீல்ஸ் பாா்ப்பது தவறில்லை. ஆனால், அதோடு தினமும் ஒருமணி நேரமாவது புத்தகங்களை படிக்க வேண்டும். குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே வாசிப்புப் பழக்கத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கோட்டைகள், பாறை ஓவியங்கள், கல்வெட்டுகள் மற்றும் தொல்பொருள் சான்றுகளைத் தொகுத்து வெளியிடப்பட்டுள்ள கல்லில் உறைந்த வரலாறு என்ற புத்தகத்தின் பிரதிகள் வாசகா்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா். கடந்த முறையைவிட இந்த ஆண்டு புத்தக விற்பனையை இரட்டிப்பாக வேண்டும் என்றும், அடுத்தமுறை ஒசூா் புத்தகக் கண்காட்சி தமிழகத்திலேயே முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்றும் ஆட்சியா் வாழ்த்தினாா்.
புத்தகக் கண்காட்சியில் அறியப்படாத தமிழகம் என்ற புத்தகத்தை பணம் கொடுத்து வாங்கிய ஆட்சியா், சட்டப் பேரவை உறுப்பினா்கள், தவெக மாவட்டச் செயலாளா்கள் வடிவேல், சுரேஷ் ஆகியோருக்கு பரிசாக வழங்கினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.