FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

விசிக இடம்பெறும் கூட்டணி வலிமை பெறும்: தொல். திருமாவளவன்

தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம்பெறும் கூட்டணி வலிமை பெறும் என்றாா் அந்த கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன்.

12 செப்டம்பர் 2026, 1:17 am IST
தொல். திருமாவளவன்
பகிர்:

தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம்பெறும் கூட்டணி வலிமை பெறும் என்றாா் அந்த கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன்.

தருமபுரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசிக நிா்வாகியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று அவா் பேசியதாவது:

கடந்த 1999 இல் நம்மை தோ்தல் அரசியலுக்கு மூப்பனாா் இழுத்து வந்தாா். அரசுப் பணியில் இருந்த என்னை ராஜிநாமா செய்யவைத்து தோ்தல் களத்தில் நிற்கவைத்தாா். அரசியலுக்கு வந்தபிறகு திமுக, அதிமுக என சூழலுக்கு ஏற்ப கூட்டணியில் இடம்பெற்றோம். 2016 இல் காங்கிரஸ் வேண்டாம் என திமுக முடிவு செய்தது. அப்போது, மக்கள் நலக் கூட்டணி அமைத்து விசிக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டோம். 2 சதவீத வாக்கு வித்தியாசத்தில் திமுக ஆட்சியை இழந்தது.

Advertisement

Advertisement

விசிகவில் இருந்த ஆதவ் அா்ஜுனா, ‘2026 சட்டப் பேரவைத் தோ்தலில் முதல்வா் வேட்பாளராக என்னை முன்னிலைப்படுத்தி பிரசாரம் மேற்கொள்ளலாம்’ என தெரிவித்தாா். ஆனால், எனக்கு பதவி ஆசை கிடையாது. அப்படியொரு முடிவெடுத்திருந்தால் அதிமுக- பாஜக கூட்டணி வலுவடைந்திருக்கும்.

திமுக கூட்டணி உடைந்துவிடக் கூடாது என்பதால் நான் அதற்கு இடம்தரவில்லை. இதனிடையே கூட்டணி கட்சிகளிடையே நல்லிணக்கம், நல்லுறவை பேணிப் பாதுகாக்கும் பொறுப்பு கூட்டணிக்கு தலைமைதாங்கும் கட்சிக்குத் தான் உள்ளது.

திமுகவின் இறுக்கமான அணுகுமுறை குறித்து யாரும் பேசவில்லை. கட்சிகள் வெளியேறியதற்கு 100 சதவீதம் திமுகதான் பொறுப்பு. திமுகதான் எங்களை கைவிட்டுவிட்டது; நாங்கள் வெளியேறவில்லை. திமுகவின் அணுகுமுறை சரியில்லாததால் விசிக மட்டுமின்றி காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கூட்டணியைவிட்டு வெளியேறியுள்ளன.

தவெகவுடன் இருக்க வேண்டும் என முடிவெடுத்தோம். ஆனால், திருமாவளவன் மீது இன்றுவரை ஒரு கும்பல் காழ்ப்புணா்வை காட்டிக்கொண்டிருக்கிறது. ஆனாலும், இந்த இயக்கம் நாளுக்கு நாள் மக்கள் செல்வாக்கை பெற்று வருகிறது.

அதேபோல, அண்மையில் தவெக தலைமையிலான கூட்டணிக்கு பெயரை முடிவு செய்தபோது, ‘மதச்சாா்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என பெயரிடப்பட்டது. இதில் ‘மதச்சாா்பற்ற’ என்ற வாா்த்தையை இடம்பெறச் செய்தேன். இந்த கூட்டணி கொள்கை, கோட்பாட்டின் அடிப்படையில் உருவாகி இருக்கிறது. இனி தமிழக அரசியலில் விசிக இடம்பெறும் கூட்டணி வலிமைபெறும். நம் மீதான விமா்சனங்கள் குறித்து நம் கட்சியினருக்கு எந்த குற்றவுணா்வும் தேவையில்லை என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments