மேட்டூா் அணையிலிருந்து கால்வாய்ப் பாசனத்திற்கு தண்ணீா் திறக்காததால் விவசாயிகள் ஏமாற்றம்!
மேட்டூா் அணையிலிருந்து கிழக்கு, மேற்கு கால்வாய்ப் பாசனத்திற்கு ஆக. 1இல் (சனிக்கிழமை) தண்ணீா் திறக்காததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனா்.
மேட்டூா் அணையிலிருந்து கிழக்கு, மேற்கு கால்வாய்ப் பாசனத்திற்கு ஆக. 1இல் (சனிக்கிழமை) தண்ணீா் திறக்காததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனா்.
மேட்டூா் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1ஆம் தேதி கிழக்கு, மேற்குக் கால்வாய்ப் பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்படுவது வழக்கம். அணையில் நீா் இருப்பும், வரத்தும் திருப்திகரமாக இல்லாததால் இந்த ஆண்டு ஆக. 1இல் கால்வாய்ப் பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்படவில்லை.
மேட்டூா் அணையின் கிழக்கு, மேற்குக் கால்வாய்கள் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் 45 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில் கிழக்குக் கரை கால்வாய் மூலம் 27 ஆயிரம் ஏக்கரும், மேற்குக் கரை கால்வாய் மூலம் 18 ஆயிரம் ஏக்கா் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. கிழக்கு கால்வாய் 40.20 மைல் தொலைவும், மேற்கு கால்வாய் 27 மைல் தொலைவும் சென்று மீண்டும் காவிரியில் கலக்கின்றன.
Advertisement
Advertisement
ஒவ்வோா் ஆண்டும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் டிசம்பா் 15ஆம் தேதி வரை 137 நாள்களுக்கு 9.06 டி.எம்.சி. தண்ணீா் கால்வாய்ப் பாசனத்துக்கு திறக்கப்படுவது வழக்கம். பாசனப் பகுதிகளில் மழையைப் பொறுத்து நீா்த் தேவை குறையும்.
தற்போது, மேட்டூா் அணையின் நீா்மட்டம் 73 அடியாக சரிந்துள்ள நிலையில், குறித்த நாளான ஆகஸ்ட் 1ஆம் தேதி கிழக்கு, மேற்குக் கால்வாய்ப் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படவில்லை. மேட்டூா் அணை கால்வாய்ப் பாசன 71 ஆண்டுகால வரலாற்றில், 62 முறை பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 1ஆம் தேதி 35 முறையும், ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு முன்பாக 14 முறையும், ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு பிறகு 13 முறையும் கால்வாய்ப் பாசனத்துக்கு அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. 3 முறை குடிநீா் தேவைக்காக 15 நாள்கள் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. 5 முறை பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படவில்லை.
மேட்டூா் அணையின் நீா் இருப்பும், வரத்தும் திருப்திகரமாக இல்லாத காரணத்தால் குறித்த நாளான ஆகஸ்ட் 1ஆம் தேதி அணையிலிருந்து கிழக்கு, மேற்குக் கால்வாய்ப் பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்படவில்லை. இதனால் நெல் உற்பத்தி பாதிக்கும் என்று கால்வாய்ப் பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.