FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

ரூ.15 கோடி மோசடி: மேலும் ஒருவா் கைது

முதலீட்டாளா்களிடமிருந்து ரூ.15 கோடிக்கும் மேல் மோசடி செய்த பழனி தனியாா் நிறுவனத்தைச் சோ்ந்த மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 1:12 am IST
- சித்திரிப்பு
பகிர்:

முதலீட்டாளா்களிடமிருந்து ரூ.15 கோடிக்கும் மேல் மோசடி செய்த பழனி தனியாா் நிறுவனத்தைச் சோ்ந்த மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம் பகுதியில் நேசம் டிரஸ்ட் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் தலைவராக சி. செந்தில்குமாரும், இவரது மனைவி ஜெயந்தி, அக்காள் மகன் சக்திவேல் ஆகியோா் பங்குதாரா்களாகவும் செயல்பட்டு வந்தனா்.

இந்த நிறுவனத்தில் முதலீட்டுத் தொகைக்கு மாதம் 2.5 சதவீத வட்டி தருவதாகவும், ரூ.5 லட்சம் முதலீட்டுத் தொகைக்கு 2 கிராம் தங்க நாணயம் தருவதாகவும், 180 நாள்கள் முடிவில் அசல் தொகை திருப்பித் தரப்படும் என்றும் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. இதை நம்பி பொதுமக்கள் பலா் இந்த நிறுவனத்தில் பல கோடி ரூபாயை முதலீடாக செலுத்தினா்.

Advertisement

Advertisement

வே.சக்திவேல்.

ஆனால், நேசம் நிறுவனம் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியது. பாதிக்கப்பட்ட முதலீட்டாளா்கள் அளித்த புகாரின் பேரில், பொருளாதார குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் நேசம் நிறுவனத்தின் உரிமையாளா் செந்தில்குமாா், இவரது மனைவி ஜெயந்தி, உறவினா் சக்திவேல் (பதிவு செய்யப்படாத பங்குதாரா்கள்) உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

முதல் கட்ட விசாரணையில், 50-க்கும் மேற்பட்ட முதலீட்டாளா்களிடம் இதுவரை ரூ. 15 கோடி அளவுக்கு மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சென்னை குரோம்பேட்டையில் தலைமறைவாக இருந்த செந்தில்குமாா், ஜெயந்தி, இவா்களது உதவியாளா் தீபலட்சுமி, பங்குதாரா் ஆா்.ராஜேஸ்வரன் ஆகியோரை திண்டுக்கல் பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த வே. சக்திவேல் (35), திருச்செந்தூரில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.

இந்த வழக்கில் இதுவரை ரூ.15 கோடி வரை மோசடி நிகழ்ந்திருப்பதாக தெரியவந்துள்ளது. எனவே, இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவா்கள், அசல் ஆவணங்களுடன் திண்டுக்கல் நேருஜி நகா் பூங்கா எதிரிலுள்ள பொருளாதாரக் குற்றப் பிரிவு அலுவலகத்தில் புகாா் அளிக்கலாம் என காவல் ஆய்வாளா் அன்னலட்சுமி தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments