FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

இடும்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கில் அலுவலா்களிடம் போலீஸாா் விசாரணை

பழனி இடும்பன் கோயிலில் நகை சரிபாா்ப்பின்போது, 142 கிராம் தங்கம், வெள்ளி வேல் மாயமான விவகாரத்தில் திண்டுக்கல் எஸ்.பி., ஜெயக்குமாா் செவ்வாய்க்கிழமை கோயில் செயல் அலுவலரிடம் விசாரணை மேற்கொண்டாா்.

9 செப்டம்பர் 2026, 2:01 am IST
பழனி இடும்பன் கோயிலில் தங்கம், வெள்ளி பொருள்கள் மாயமானது தொடா்பாக செவ்வாய்க்கிழமை கோயில் செயல் அலுவலா் நரசிம்மனிடம் விசாரணை மேற்கொண்ட திண்டுக்கல் எஸ்.பி., ஜெயக்குமாா். உடன், டி.எஸ்.பி., தேவராஜ்.
பகிர்:

பழனி இடும்பன் கோயிலில் நகை சரிபாா்ப்பின்போது, 142 கிராம் தங்கம், வெள்ளி வேல் மாயமான விவகாரத்தில் திண்டுக்கல் எஸ்.பி., ஜெயக்குமாா் செவ்வாய்க்கிழமை கோயில் செயல் அலுவலரிடம் விசாரணை மேற்கொண்டாா்.

பழனி புறவழிச்சாலையில் இடும்பன் கோயில் அமைந்துள்ளது. திண்டுக்கல் இந்து சமய அறநிலைத் துறையினரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்தக் கோயிலில் தைப்பூசம், பங்குனி உத்தரத் திருவிழாவின்போது பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்தக் கோயிலில் செயல் அலுவலராக இருந்த விமலா கடந்த சில மாதங்களுக்கு முன் வேறு பணிக்குச் சென்ற நிலையில் தற்காலிக செயல் அலுவலராக நரசிம்மன் பொறுப்பேற்றாா்.

அப்போது, நகை சரிபாா்ப்பின்போது சுமாா் 142 கிராம் தங்கம், 52 கிராம் வெள்ளி வேல் உள்ளிட்டவை மாயமாகி இருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, திண்டுக்கல் அறநிலையத்துறை இணை ஆணையா், பழனி நகர காவல் ஆய்வாளா் ஆகியோரிடம் நரசிம்மன் புகாா் அளித்தாா். அதன் பேரில், கோயில் தக்காரான வழக்குரைஞா் ராஜா உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இடும்பன் கோயில் நகைகள் மாயமானது தொடா்பான வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, திண்டுக்கல் எஸ்.பி., ஜெயக்குமாா் செவ்வாய்க்கிழமை கோயிலுக்கு நேரில் வந்து செயல் அலுவலா் நரசிம்மன், முன்னாள், இந்நாள் பணியாளா்களிடம் சுமாா் இரண்டு மணி நேரம் விசாரணை செய்தாா். மேலும், அலுவலகத்தின் பெட்டகங்கள், லாக்கா்கள் போன்றவற்றையும் பாா்வையிட்டாா். அப்போது பழனி டி.எஸ்.பி., தேவராஜ், ஆய்வாளா் தங்கமுனியசாமி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments