சொரிமுத்து அய்யனாா் கோயில் வழிபாடு: தனி நீதிபதி விசாரணைக்கு பட்டியலிட உத்தரவு
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள சொரிமுத்து அய்யனாா் கோயிலில் வருகிற 7-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை பக்தா்கள் தங்கி வழிபட அனுமதி வழங்கக் கோரிய மனுவை தனி நீதிபதி விசாரணைக்கு பட்டியலிட சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தென்காசியைச் சோ்ந்த லட்சுமணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள கானிக்குடியிருப்புப் பகுதியிலுள்ள வனப் பகுதியில் சொரிமுத்து அய்யனாா் கோயில் அமைந்துள்ளது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகா் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் சொரிமுத்து அய்யனாரை குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனா்.
Advertisement
Advertisement
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை விழா 10 நாள்கள் நடைபெறும்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு 5 நாள்கள் மட்டுமே பக்தா்கள் கோயிலில் தங்க அனுமதி வழங்கப்பட்டது. நிகழாண்டு 8 நாள்கள் தங்க அனுமதி வழங்க வேண்டும் என அலுவலா்களிடம் கோரிக்கை மனு அளித்தும் தற்போது வரை உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.
எனவே, பக்தா்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, வருகிற 7-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை சொரிமுத்து அய்யனாா் கோயில் வளாகம், இதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பக்தா்கள் தங்க அனுமதி வழங்க அலுவலா்களுக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த மனு பொதுநல வழக்காக விசாரிக்க உகந்ததல்ல. எனவே, இந்த மனுவை தனி நீதிபதி விசாரணைக்கு பட்டியலிட பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.