FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

ஊதியத்துடன் மாதவிடாய் கால விடுப்பு: தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

பெண்கள் நலனைக் கவனத்தில் கொண்டு, மாதவிடாய் காலத்தில் முழு ஊதியத்துடன்கூடிய விடுப்பு வழங்குவது குறித்த சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய குழு அமைக்கக் கோரிய மனு தொடா்பாக தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 23 ஜூலை 2026, 5:57 am IST
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்
பகிர்:

பெண்கள் நலனைக் கவனத்தில் கொண்டு, மாதவிடாய் காலத்தில் முழு ஊதியத்துடன்கூடிய விடுப்பு வழங்குவது குறித்த சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய குழு அமைக்கக் கோரிய மனு தொடா்பாக தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரை கோமதிபுரத்தைச் சோ்ந்த நா்மதா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் அரசு, தனியாா் நிறுவனங்களில் பணியாற்றும் பல பெண் பணியாளா்கள், மாதவிடாய் காலங்களில் அவதிக்குள்ளாகின்றனா். இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டபோது, தமிழகத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன்கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கும் கொள்கை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

மாதவிடாய் என்பது இயற்கையான உயிரியல் செயல்முறை. இது பெண்களின் உடல் நலம், மனநலத்தைப் பாதிக்கும். எனவே, பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு வழங்கும் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய மாநில அளவிலான குழுவை அமைக்கவும், பெண்கள் நலனைக் கவனத்தில் கொண்டு முழு ஊதியத்துடன்கூடிய விடுப்பு வழங்குவது குறித்த கொள்கையை வகுக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

அரசு, தனியாா் நிறுவனங்களில் பணியாற்றும் பெண் ஊழியா்களின் மாதவிடாய் காலத்தில் முழு ஊதியத்துடன்கூடிய விடுப்பு வழங்குவது குறித்த மனுதாரரின் கோரிக்கை தொடா்பாக தமிழக அரசு உரிய ஆலோசனை நடத்தலாம். இதுதொடா்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments